Last Updated : 22 Dec, 2017 10:27 AM

 

Published : 22 Dec 2017 10:27 AM
Last Updated : 22 Dec 2017 10:27 AM

2ஜி அலைக்கற்றை வழக்கு ஜோடிக்கப்பட்டது: வழக்கறிஞர் சண்முகசுந்தரம் உறுதி

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் அமிர்தம், தயாளு அம்மாள் மற்றும் கலைஞர் டி.வி.க்காக வழக்கறிஞர் சண்முக சுந்தரம் ஆஜரானார்.

வழக்கில் தீர்ப்புக்கு பிறகு அவர் ‘தி இந்து’விடம் கூறும்போது, “இது ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கு. சிஏஜியால் தவறாகக் கணக்கிடப்பட்டு கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் தொடரப்பட்டது. ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு என பெயருக்கு ஒரு புகார் கொடுத்து விட்டனர். இந்த அலைக்கற்றை உரிமங்களை மீண்டும் ஏலம் விட்டபோது ஏழாயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கும் போகவில்லை. இந்த வழக்கில் மேல்முறையீடு அனுமதிக்கப்பட்டு விசாரிக்கப்படலாம். ஆனால் சிபிஐ நீதிமன்றத்தை போல அங்கும் இந்த வழக்கு தோல்வி அடையும்” என்றார்.

‘தி பயனியர்’ ஆங்கில நாளிதழின் சிறப்பு செய்தியாளரான கோபி கிருஷ்ணா, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக பல செய்திகளை தொடர்ந்து ஆதாரங்களுடன் வெளியிட்டு வந்தார்.

தீர்ப்பு குறித்து ‘தி இந்து’விடம் அவர் கூறும்போது, “மிகவும் தவறான தீர்ப்பு இது. இதை எதிர்த்து சிபிஐ மேல்முறையீடு செய்யாவிட்டாலும் மனுதாரர் கண்டிப்பாக செய்வார். ஏனெனில் 2002-ல், 2ஜி உரிமங்கள் தவறான முறையில் அளிக்கப்பட்டதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா அளித்த உரிமங்களை ரத்து செய்தது. சிஏஜி-யின் கணக்கு தவறு எனக் கூறமுடியாது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x