Published : 17 Dec 2017 11:13 AM
Last Updated : 17 Dec 2017 11:13 AM

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவுக்கு 3 ஆண்டு சிறை

2006 முதல் 2008 வரை ஜார்க்கண்ட் முதல்வராக மதுகோடா இருந்தார். அப்போது, அம்மாநிலத்தின் ராஜ்கரா நிலக்கரிச் சுரங்கம், கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘வினி அயர்ன் அண்ட் ஸ்டீல் உத்யோக்’ என்ற தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதில் ஊழல் நடந்ததாக சிபிஐ தொடர்ந்த வழக்கு, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் மதுகோடா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என நீதிபதி பரத் பராஷர் கடந்த 13-ம் தேதி அறிவித்தார். இந்நிலையில் தண்டனை விவரத்தை அவர் நேற்று அறிவித்தார்.

இதில் மதுகோடா, மத்திய நிலக்கரித் துறை முன்னாள் செயலாளர் எச்.சி.குப்தா, ஜார்க்கண்ட் மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் ஏ.கே.பாசு, மதுகோடாவின் நெருங்கிய உதவியாளர் விஜய் ஜோஷி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இது தவிர, மதுகோடாவுக்கு ரூ.25 லட்சம், எச்.சி.குப்தாவுக்கு ரூ.1 லட்சம், ஏ.கே.பாசுவுக்கு ரூ.1 லட்சம், விஜய் ஜோஷிக்கு ரூ.25 லட்சம், வினி நிறுவனத்துக்கு ரூ.50 லட்சம் என அபராதம் விதிக்கப்பட்டது.

தண்டனை விதிக்கப்பட்டோர், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக, அனைவருக்கும் 2 மாதங்கள் ஜாமீன் வழங்கியும் நீதிபதி உத்தரவிட்டார்.

ஜாரக்கண்ட் மாநிலத்தின் ராஜ்கரா நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு கோரி 2007 ஜனவரியில் வினி நிறுவனம் விண்ணப்பம் செய்தது. இந்நிலையில் ஜார்க்கண்ட் அரசு மற்றும் மத்திய உருக்கு அமைச்சகத்தின் சிபாரிசு இல்லாமலேயே அந்த நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்யும்படி ஆய்வுக்குழு பரிந்துரை செய்தது.

ஆய்வுக் குழுவின் தலைவராக, அப்போதைய நிலக்கரித் துறை செயலாளர் எச்.சி.குப்தா இருந்தார். அவர் அப்போது நிலக்கரித் துறையை தன்வசம் வைத்திருந்த பிரதமர் மன்மோகன் சிங்கிடம், இந்த உண்மையை மறைத்துவிட்டார் என்றும் சிபிஐ குற்றம் சாட்டியது. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x