Last Updated : 20 Sep, 2023 06:35 AM

 

Published : 20 Sep 2023 06:35 AM
Last Updated : 20 Sep 2023 06:35 AM

காலிஸ்தான் தீவிரவாதி கொலை விவகாரம் | கனடா பிரதமர் ட்ரூடோவுக்கு மத்திய அரசு கண்டனம் - தூதரக அதிகாரி வெளியேற உத்தரவு

புதுடெல்லி: காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப்சிங் நிஜார் கொலையில் இந்தியா மீது குற்றம் சுமத்திய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லியிலுள்ள கனடா தூதரகத்தின் தலைமை அதிகாரியை உடனடியாக இந்தியாவிலிருந்து வெளியேறும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

காலிஸ்தான் தனிநாடு கோரும் பஞ்சாபின் பிரிவினை ஆதரவாளர்களில் முக்கியமானவர் ஹர்தீப்சிங் நிஜார். இம்மாநிலத்தின் ஜலந்தர் மாவட்ட பர் சிங் புரா கிராமத்தை சேர்ந்த இவர், பிழைப்புக்காக கடந்த 1997-ல் கனடாவுக்கு இடம் மாறினார். ஹர்தீப்புக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். கனடாவில் இந்தியாவுக்கு எதிரான காலிஸ்தான் தீவிரவாத ஆதரவு நிலை நிலவுகிறது. இதனால், அங்கிருந்தபடி காலிஸ்தான் டைகர் போர்ஸ் தலைவராகவும், சிக்ஸ் பார் ஜஸ்டிஸ் அமைப்பின் கனடா பிரிவின் தலைவராகவும் பொறுப்பேற்றார் ஹர்தீப்.

இந்த இரண்டு அமைப்புகளுமே இந்தியாவில் தடை செய்யப்பட்டு தீவிரவாத இயக்கங்களாக அறிவிக்கப்பட்டவை.

ஹர்தீப்பை இந்தியா தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. இவரை கைது செய்ய உதவுபவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு எனவும் தேசிய புலனாய்வு அமைப்பு கடந்த வருடம் ஜுனில் அறிவிப்பை வெளியிட்டது.

எனினும், இந்தியாவுக்கு எதிரான ஹர்தீப்பின் தேசவிரோத நடவடிக்கைகள் கனடா, அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் வெளிப்படையாகத் தொடர்ந்தன.

இச்சூழலில், ஹர்தீப் அவர் வசித்த கனடாவின் சுரே நகரின் குருத்துவாரா அருகில் அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்களால் கடந்த ஜுன் 18-ல் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் அவரது கொலையில் இந்தியாவின் பங்கு இருக்கவாய்ப்புள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.நேற்று முன்தினம் கனடா பிரதமர் மற்றும் அதன்வெளியுறத்துறை அமைச்சர்ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் ஹர்தீப் கொலையில் இந்தியா மீது குற்றம் சுமத்தி பேசினார்.

இதைக் கடுமையாக மறுத்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இது மிகவும் அபத்தமானது எனவும், இந்தியா சட்டங்களுக்கு உட்பட்ட நாடு என்றும் உடனடியாக மறுப்பு தெரிவித்திருந்தார். இத்துடன், இந்தியா மீது அபாண்டமாக பழி சுமத்தும் கனடா, காலிஸ்தான் தீவிரவாதத்துக்கு ஆதரவளிப்பதாகவும் குற்றம் சுமத்தினார்.

இத்துடன் கனடாவின் பிரதமர் ட்ரூடோ, இந்தியத் தூதரகத்தின் அதிகாரி பவன்குமார் ராய் உடனடியாக கனடாவை விட்டு வெளியேற வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இது இந்தியா உள்ளிட்ட பல வெளிநாடுகளையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இந்நிலையில், இதற்கு பதிலடியாக, டெல்லியிலுள்ள கனடா நாட்டின் முக்கிய அதிகாரியான ஒலிவியர் சில்வர்ஸ்டரை ஐந்து நாட்களுக்குள் இந்தியாவை விட்டு வெளியேறும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x