Published : 23 Dec 2017 05:55 PM
Last Updated : 23 Dec 2017 05:55 PM
பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் மகள் மிசா பாரதி மற்றும் அவரது கணவர் சைலேஷ் குமார் மீதான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகளான மிசா பாரதி, அவரது கணவர் சைலேஷ் குமார் ஆகிய இருவரும், 8 ஆயிரம் கோடி ரூபாய் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை செய்ததாக புகார் எழுந்தது.
டில்லியைச் சேர்ந்த சுரேந்திர குமார் ஜெயின், வீரேந்திரா ஜெயின் என்ற இரு சகோதரர்கள் மற்றும் சிலர், போலி நிறுவனங்களைப் பயன்படுத்தி பல ஆயிரம் கோடி ரூபாயை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்தது தொடர்பாக அமலாக்கத் துறை விசாரித்தது. இதில் ஜெயின் சகோதரர்களுக்கு சொந்தமான ஒரு நிறுவனத்துடன் மிசா பாரதி தம்பதியரின் மிஷைல் பிரிண்டர்ஸ் நிறுவனத்துக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, மிசா பாரதி மற்றும் சைலேஷ் குமாருக்கு சொந்தமான 3 பண்ணை வீடுகள் மற்றும் ஒரு நிறுவனத்தில் அமலாக்கத் துறை கடந்த ஜூலை மாதம் சோதனை நடத்தியது. அப்போது கிடைக்கப் பெற்ற ஆவணங்களின் அடிப்படையில் மிசா பாரதி, சைலேஷ் குமார் ஆகியோரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஏற்கெனவே விசாரணை நடத்தியுள்ளனர். அவரது சொத்துகளும் முடக்கப்பட்டன.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக டில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் இன்று (டிசம்பர் 23, 2017) குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். சிறப்பு நீதிமன்ற நீதிபதி என்.கே. மல்ஹோத்ரா முன்னிலையில், அமலாக்கத்துறை வழக்கறிஞர் நிதிஷ் ராணா குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT