Published : 23 Dec 2017 05:36 PM
Last Updated : 23 Dec 2017 05:36 PM
நடிகை நயன்தாராவின் படத்தை அனுப்பி, காதலியாக நடித்து பிஹார் கொள்ளைக்காரர் ஒருவரை கைது செய்திருக்கிறார் மதுபாலா தேவி என்கிற காவல்துறை அதிகாரி. இந்த சம்பவம் பிஹாரில் இருந்து 150 கி.மீ. வடக்கில், தர்பாங்கா மாவட்டத்தில் புதன்கிழமை மாலை நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் கூறும்போது, ''பிஹார் மாநில பாஜக பிரமுகர் சஞ்சய் குமார் மஹதோவின் விலை உயர்ந்த செல்போன் சில நாட்களுக்கு முன்பு திருடுபோனது.
இதுதொடர்பாக தர்பாங்கா காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க உதவி எஸ்.ஐ. மதுபாலா தேவி நியமிக்கப்பட்டார்.
தொலைந்துபோன மொபைலின் அழைப்பு விவரங்களை ஆராய்ந்து பார்த்தபோது, பிஹார் கொள்ளைக்காரர் முகமது ஹஸ்னைன் என்பவர் போனைப் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.
அவரைக் கைது செய்ய காவல்துறையினர் பலமுறை முயற்சித்தும், அவர் தப்பிச் சென்றுள்ளார். இந்நிலையில் அவரைப் பிடிக்கப் புதுவிதத் திட்டம் தீட்டினார் மதுபாலா தேவி.
ஹஸ்னைனைக் காதலிப்பதாகக் கூறி, தொடர்ந்து அவரிடம் தொலைபேசினார். வாட்ஸ் அப்பில் செய்திகள் அனுப்பினார். ஆரம்பத்தில் இதை நம்பாத ஹஸ்னைன், ஒரு கட்டத்தில் காதல்வயப்பட்டார். எனினும் மதுபாலாவின் புகைப்படத்தை அனுப்புமாறு கேட்டார். உடனே நயன்தாராவின் புகைப்படத்தை அனுப்பினார் மதுபாலா.
நயன்தாரா ஒரு நடிகை என்பது தெரியாமல் அந்த அழகான புகைப்படத்தைக் கண்டு மயங்கிய ஹஸ்னைன், தர்பாங்காவில் மதுபாலாவைச் சந்திக்க ஒப்புக்கொண்டார். அதன்படி சந்திக்க வந்த ஹஸ்னைனைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட ஹஸ்னைன், மற்றொரு குற்றவாளியிடம் இருந்து ரூ.4,500க்கு போனை வாங்கியதாகக் கூறியுள்ளார். அவரிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், இரண்டாவது குற்றவாளியும் கைது செய்யப்பட்டுள்ளார்’’ என்றனர்.
மதுபாலா தேவியின் செயலைப் பாராட்டி, மாநில காவல்துறை அவருக்கு வெகுமதி அறிவித்துள்ளது. இந்த செய்தியை கல்ஃப் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT