Last Updated : 31 Aug, 2023 07:18 AM

 

Published : 31 Aug 2023 07:18 AM
Last Updated : 31 Aug 2023 07:18 AM

மக்களவை தேர்தலில் வெல்ல பாஜக புதிய திட்டம் - இளம் வயது புதுமுகங்கள், மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு வாய்ப்பு

புதுடெல்லி: வரும் மக்களவைத் தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக புதிய திட்டம் வகுத்துள்ளது. இதன்படி இளம் வயது புதுமுகங்கள் மற்றும் மாநிலங்களவை முக்கிய எம்.பி.க்களுக்கு தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 2014 முதல் மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக, மூன்றாவது முறையாக ஆட்சியில் தொடர முயற்சிக்கிறது. இதற்காக பல்வேறு புதிய உத்திகளை வரும் மக்களவை தேர்தலில் கையாளத் திட்டமிடுகிறது. இதில் முக்கியமாக அனைத்து மாநிலங்களிலும் இளைஞர்களை வேட்பாளர்களாக்க உள்ளது. புதிய முகங்களான இவர்கள் வேட்பாளர் பட்டியலில் பாதி இடத்தை பிடிக்க உள்ளனர். 2024 தேர்தலில் சுமார் 60 சதவீதம் இளம் வாக்காளர்கள் இடம் பெற்றிருப்பது இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

மேலும் தற்போதைய பாஜக எம்.பி.க்களில் பலரும் மூத்த வயதை எட்டி வருவதும் காரணமாகி விட்டது. கடந்த 2014-ல் பிரதமர் மோடி பதவி ஏற்றது முதல் வயோதிகம் காரணமாக பாஜக ஓரம் கட்டப்பட்டு வருகின்றனர். முக்கியத் தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோரும் இவர்களில் அடங்குவர். தொடர்ந்து 75 வயதை கடந்தவர்கள் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலக்கப்பட்டனர். 2024 தேர்தலிலும் இந்த நடவடிக்கை தீவிரமாகத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சர்களான மேனகா காந்தி, சந்தோஷ் கங்குவார் ஆகியோர் 9 முறை எம்.பி.க்களாக இருந்துள்ளனர். 75 வயதான இவர்களும் வயோதிக தலைவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளனர். உ.பி.யின் மதுராவில் இருந்து 2-வது முறையாக எம்.பி. ஆகியுள்ள நடிகை ஹேமாமாலினிக்கும் 75 வயது நெருங்குவதால், அவரைப் போன்றவர்களும் வரும் தேர்தலில் போட்டியிடுவது சந்தேகமே.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் பாஜக சார்பில் 92 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களில் நிர்மலா சீதாராமன், பூபேந்தர் யாதவ், தர்மேந்தர் பிரதான், மன்சுக் மாண்டவியா, பியூஷ் கோயல், ஹர்தீப்சிங் புரி, ராஜீவ் சந்திரசேகர், புருஷோத்தம் ரூபாலா, எஸ்.ஜெய்சங்கர், அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் மத்திய அமைச்சர்களாக உள்ளனர். இவர்கள் உள்ளிட்ட மாநிலங்களவை முக்கிய எம்.பி.க்களை மக்களவை தேர்தலில் நிறுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இவர்கள் தேர்தலில் தோற்றாலும் அவர்களது எம்.பி.பதவி ரத்தாகாது. இதன்படி அஸ்வினி வைஷ்ணவ், தர்மேந்தர் பிரதான் ஆகியோர் போட்டியிடுவது உறுதியாகி விட்டது. திருவனந்தபுரத்தில் நிதியமைச்சர் நிர்மலாவை போட்டியிட வைக்கவும் திட்டமிடப்படுகிறது. பாஜகவின் இந்த புதிய திட்டங்களுக்கான சில யோசனைகளை பிரதமர் மோடியும் கூறியிருந்தார். எனவேவரும் தேர்தலை பாஜக பெரும் சவாலாக ஏற்று களம் இறங்குகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x