Published : 22 Dec 2017 06:17 PM
Last Updated : 22 Dec 2017 06:17 PM
குஜராத்தில் சுயேச்சையாக வெற்றி பெற்றுள்ள எம்எல்ஏ ஒருவர் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதன் மூலம், அங்கு ஆளும் அணியின் பலம் 100 ஆக உயர்ந்தது.
குஜராத் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் திங்களன்று வெளியாகின. அங்கு மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 99 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 77 இடங்களிலும் வெற்றி பெற்றன. தேசியவாத காங்கிரஸ் உட்பட காங்கிரஸ் ஆதரவுடன் 3 பேர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதனால் எதிர்கட்சி எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 80 ஆக உள்ளது. பாரதிய பழங்குடியினர் கட்சியின் சார்பில் இருவர் எம்எல்ஏக்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில், லூனாவாடா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்ற ரத்தன்சிங் ரத்தோட் பாஜகவை ஆதரிப்பதற்காக அறிவித்துள்ளார். குஜராத் ஆளுநர் கோஹ்லியை சந்தித்து பாஜகவுக்கான ஆதரவு கடிதத்தை வழங்கினார். இதை தொடர்ந்து பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டார்.
காங்கிரஸ் நிர்வாகியான ரத்தன்சிங்கிற்கு, சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட அக்கட்சி வாய்ப்பு வழங்கவில்லை. இதையடுத்து காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்டு ரத்தன்சிங் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT