Published : 23 Dec 2017 09:28 AM
Last Updated : 23 Dec 2017 09:28 AM
காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்ட பின்னர், அவரது தலைமையில் முதல்முறையாக அக்கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி கடந்த 11-ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சி தலைவராக 16-ம் தேதி முறைப்படி பொறுப்பேற்றார். அதன்பின் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் டெல்லியில் ராகுல் தலைமையில் நேற்று நடந்தது. கட்சி தலைவராக ராகுல் பொறுப்பேற்ற பிறகு அவரது தலைமையில் நடக்கும் முதல் காரியக் கமிட்டி கூட்டம் இதுதான்.
இக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கட்சியின் மூத்த தலைவர்கள் மோதிலால் வோரா, குலாம் நபி ஆசாத், ஜனார்த்தன் திவிவேதி, மல்லிகார்ஜுன கார்கே, ஆனந்த் சர்மா, அம்பிகா சோனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
முன்னதாக கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த ராகுல் காந்திக்கும் சோனியாவுக்கும் கட்சித் தலைவர்கள் வரவேற்பு அளித்தனர். கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அம்சங்கள் குறித்த தகவல்களை காங்கிரஸ் தலைவர்கள் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.
கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ‘‘குஜராத் மாதிரி வளர்ச்சி என்பதே பொய்யானது. குஜராத் மக்களிடம் நான் பேசும்போது வளர்ச்சியே இல்லை என்று தெரிவித்தனர். பாஜகவின் அடித்தளமே பொய்யானது. பாஜக தலைவர் அமித் ஷா மகனின் நிதி முறைகேடுகள் குறித்த கேள்விக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்கவில்லை. 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் உண்மை வெளியே வந்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கொள்கைகளை பாஜக திரித்துக் கூறியது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT