Published : 12 Aug 2023 04:22 AM
Last Updated : 12 Aug 2023 04:22 AM

ரஷ்யாவின் லூனா-25 விண்கலம், சந்திரயானுக்கு போட்டியில்லை - இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கருத்து

சென்னை: ரஷ்யாவின் லூனா-25 விண்கலத்தை, சந்திரயானுக்கு போட்டியாக கருத வேண்டாம் என்று இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆராய்ச்சி செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தியது. ஆகஸ்ட் 23-ம் தேதி தென் துருவப் பகுதியில் விண்கலத்தை மெதுவாக தரையிறக்க இஸ்ரோ முடிவு செய்து உள்ளது.

இந்நிலையில் நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக ரஷ்யாவும் லூனா-25 எனும் விண்கலத்தை நேற்று அதிகாலை 2 மணியளவில் விண்ணில் ஏவியது. இது நிலவின் மேற்பரப்பில் உள்ள பனிக்கட்டிகள், கனிமங்கள், எரிபொருள் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யவுள்ளது. சுமார் 5 நாட்கள் பயணத்துக்கு பின்னர் நிலவின் சுற்றுப்பாதையை விண்கலம் சென்றடையும். தொடர்ந்து 5 முதல் 7 நாட்கள் சுற்றுப்பாதையில் சுற்றிவந்து நிலவில் லூனா-25 தரையிறங்க உள்ளது.

அதன்படி சாதகமான சூழல்கள் அமைந்தால் சந்திரயான்-3 விண்கலத்துக்கு முன்பே லூனா-25 நிலவில் தரையிறங்க வாய்ப்புள்ளது. இல்லையெனில் 2 விண்கலங்களும் ஒரே நாளில் நிலவில் தரையிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி சமூக வலைதளங்களில் இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையே போட்டி நிலவுவதாக தகவல்கள் பரவின.

இதுகுறித்து இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறியதாவது; இஸ்ரோவின் சந்திரயான்-3 மற்றும் ரஷ்யாவின் லூனா-25 விண்கலங்கள் ஒரேநாளில் ஒன்றுக்கு ஒன்று இடையூறு இன்றி நிலவில் தரையிறக்கப்பட உள்ளன. இதற்கிடையே 2011-ம் ஆண்டு சீனாவுடன் இணைந்து ரஷ்யா மேற்கொண்ட செவ்வாய் கிரக பயணத் திட்டம் தோல்வியடைந்தது. அதன்பிறகு முழுவதும் புதிய தொழில்நுட்பத்தில் லூனா-25 திட்டப் பணியை ரஷ்யா வடிவமைத்துள்ளது. அதன் செயல்பாடுகள் இறுதி வரை வெற்றிகரமாக அமைய வேண்டும்.

மறுபுறம் கடந்தகால அனுபவங்களின் அடிப்படையில் சந்திரயான்-3 திட்டம் சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, திட்டமிட்டபடி சந்திரயான்-3 விண்கலம் நிலவில் மெதுவாக தரையிறக்கப்படும். அதனால் சந்திரயான்- 3, லூனா-25 ஆகியவற்றை போட்டியாக கருத வேண்டாம். இரு திட்டப்பணிகளும் வெற்றி பெற வேண்டும். எதிர்காலத்தில் விண்வெளி ஆய்வுகளில் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுதவிர இஸ்ரோ ட்விட்டரில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘‘லூனா-25 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டதற்காக ரோஸ்காஸ்மாஸ் (ரஷ்யா) மையத்துக்கு வாழ்த்துகள். நிலவை நோக்கிய பயணம் இனிமையாக அமையட்டும். இரு விண்கல திட்டங்களும் வெற்றி பெறட்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x