Published : 20 Nov 2017 05:12 PM
Last Updated : 20 Nov 2017 05:12 PM
காஷ்மீரில் உள்ள பிரசித்தி பெற்ற வைஷ்ணவி தேவி கோயிலுக்கு பேட்டரி காரில் செல்லும் தனிப்பாதையை நவம்பர் 24-ம் தேதிக்குள் திறக்க வேண்டும் என்ற தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
காஷ்மீர் மாநிலத்தில் ஜம்மு அருகே உள்ள காத்ரா பகுதியில் புகழ் பெற்ற வைஷ்ணவி தேவி கோயில் அமைந்துள்ளது. இங்கு இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் நாள்தோறும் வழிபாடு நடத்த வருகின்றனர். மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த கோயிலில் அதிக அளவு பக்தர்கள் வருகையால் மாசு ஏற்படுவதாகக் கூறி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கெளரி என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் '' 'வைஷ்ணவி தேவி கோயிலுக்கு நாளொன்றுக்கு 50 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். நடந்து செல்லும் பக்தர்களுக்கும், பேட்டரி காரில் செல்பவர்களுக்கும் நவம்பர் 24-ல் தனிப்பாதையை திறக்க வேண்டும்'' என உத்தரவிட்டது.
அங்கு தனிப்பாதை கட்டுமானப் பணி நடந்து வரும் நிலையில் நவம்பர் 24-ம் தேதிக்குள் அதனை திறக்க முடியாத சூழல் உள்ளதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.பி லோகூர் மற்றும் தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தனிப்பாதை அமைக்கும் பணி, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முடிவடைந்த பின்னரே திறக்க முடியும், அதற்கு முன்னதாக திறக்கப்பட வாய்ப்பில்லை என, கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதிகள் கூறுகையில், ''வைஷ்ணாவி தேவி கோயிலுக்கு பேட்டரி கார்களில் செல்பவர்களுக்கு தனிப்பாதை அமைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது'' எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT