Published : 19 Nov 2017 10:12 AM
Last Updated : 19 Nov 2017 10:12 AM
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா அளித்த உறுதிமொழியை ஏற்று தனியார் மருத்துவர்கள் நேற்று தங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெற்றனர்.
கர்நாடகாவில் தனியார் மருத்துவமனைகளின் கட்டணத்தை கட்டுப்படுத்துதல், சிகிச்சை குறைபாட்டுக்கு தண்டனை விதித்தல் போன்ற பல கட்டுப்பாடுகளுடன் சட்டத் திருத்தம் செய்ய மாநில அரசு தயாரானது. இதற்கான சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் கடந்த 5 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் நோயாளிகள் பலர் உயிரிழக்க நேரிட்டது.
இந்நிலையில் மருத்துவ சங்க நிர்வாகிகளுடன் முதல்வர் சித்தராமையா நேற்று சுமார் 3 மணி நேரம் பேச்சு நடத்தினார். இதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கர்நாடகாவில் 2007-ல் கொண்டுவரப்பட்ட தனியார் மருத்துவமனைகள் சட்டத்தில், எளிய மக்களின் நலன் கருதி சில திருத்தங்கள் செய்தோம். அமைச்சரவையில் பல முறை விவாதித்து கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தாக்கல் செய்தோம். அதில் எதிர்க்கட்சிகள் சந்தேகங்களை எழுப்பியதால் நிபுணர்கள் அடங்கிய கூட்டுக்குழுவுக்கு அனுப்பினோம். அந்த குழுவின் அறிக்கையை தொடர்ந்து சில திருத்தங்களை செய்து, இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்ற இருக்கிறோம். இப்போது மருத்துவ சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ள சந்தேகங்களை மனதில் வைத்து மேலும் சில திருத்தங்கள் செய்யப்படும். விரைவில் இந்த மசோதாவை நிறைவேற்றுவோம். இந்த விவகாரத்தில் அரசு எந்த சமரசமும் செய்துகொள்ளவில்லை. மருத்துவர்கள் உடனே பணிக்கு திரும்புவார்கள். நாட்டில் முதல்முறையாக கர்நாடகாவில் ‘யுனிவர்சல்’ சுகாதார காப்பீடு திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளோம். இதன் மூலம் கர்நாடக மக்களுக்கு தரமான சிகிச்சை எளிதாக கிடைக்கும்” என்றார்.
இதையடுத்து கர்நாடகாவில் அனைத்து தனியார் மருத்துவமனை மருத்துவர்களும் நேற்று பணிக்குத் திரும்பினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT