Published : 19 Nov 2017 10:15 AM
Last Updated : 19 Nov 2017 10:15 AM

தேர்தல் ஆணையம் நிதிஷ்குமாரை அங்கீகரித்ததை எதிர்த்து சட்டரீதியாக தொடர்ந்து போராடுவேன் - ஐஜத மூத்த தலைவர் சரத்யாதவ் உறுதி

‘‘ஐக்கிய ஜனதா தளம் கட்சி மற்றும் சின்னத்தை பயன்படுத்த நிதிஷ்குமாருக்கு தேர்தல் ஆணையம் உரிமை வழங்கி உள்ளது. இதை எதிர்த்து ஜனநாயக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் போராடுவேன்’’ என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சரத்யாதவ் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

பிஹார் தேர்தலில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சியுடன் ஐஜத கட்சி மெகா கூட்டணி வைத்து ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக ஐஜத தலைவர் நிதிஷ்குமார் பொறுப்பேற்றார். ஆனால், லாலு மற்றும் அவரது குடும்பத்தினரிடம் ஊழல் வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து மெகா கூட்டணியில் இருந்து விலகி பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார். பின்னர் பாஜக.வுடன் கூட்டணி வைத்து மீண்டும் முதல்வரானார். இந்நிலையில், ஐஜத தேசிய கவுன்சிலின் விருப்பத்துக்கு மாறாக நிதிஷ்குமார் நடந்து கொண்டுள்ளார். எனவே, கட்சியும், கட்சி சின்னமும் எங்களுக்குதான் சொந்தம் என்று அறிவிக்க கோரி ஐஜத.வின் மூத்த தலைவர் சரத்யாதவ், தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்தார்.

அதை விசாரித்த தேர்தல் ஆணையம், ‘‘கட்சியின் எம்எல்ஏக்கள், பெரும்பாலான தேசிய குழு உறுப்பினர்கள் நிதிஷ்குமாரிடம் உள்ளனர். எனவே, உண்மையான ஐஜத கட்சி நிதிஷ்குமார் குழுதான். கட்சியின் அம்பு சின்னத்தையும் அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்’’ என்று நேற்றுமுன்தினம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதுகுறித்து சரத்யாதவ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. ஆணையத்தின் முடிவு குறித்து எனது வழக்கறிஞர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த விவகாரத்தை ஜனநாயக ரீதியாகவும், சட்டரீதியாகவும் எதிர்கொள்வேன். எங்கள் போராட்டம் தொடரும். ஜனநாயகத்தை காப்பாற்றும் எங்கள் போராட்டத்தை தேர்தல் ஆணையத்தின் முடிவு தடுத்துவிட முடியாது. இவ்வாறு சரத்யாதவ் கூறினார்.

இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க சரத்யாதவ் தரப்பினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

- ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x