Published : 10 Nov 2017 10:54 AM
Last Updated : 10 Nov 2017 10:54 AM

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கு வரி குறைக்கப்பட வாய்ப்பு

டெல்லியில் இன்று நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கான வரி விகிதங்களை குறைக்கவும், வர்த்தகர்களுக்கு சலுகைகள் அறிவிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த ஜூலை 1-ம் தேதி அமல்படுத்தப்பட்டது. இதன்மூலம் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த 30-க்கும் மேற்பட்ட மறைமுக வரிகள் ஒழிக்கப்பட்டு ஒரே வரி என்ற அடிப்படையில் விதிக்கப்படுகிறது.

ஜிஎஸ்டி வரி, 5, 12, 18, 28 என நான்கு விகிதங்களில் வசூலிக்கப்படுகிறது; சில சொகுசு பொருட்களுக்கு ஜிஎஸ்டி-யுடன் கூடுதலாக செஸ் வரியும் விதிக்கப்படுகிறது.

இந்த வரி விதிப்பால் உற்பத்தியாளர்கள், தொழில் முனைவோர், நுகர்வோர் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார மந்தநிலையும் ஏற்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து சிறு தொழில்களுக்கு குறைவான ஜிஎஸ்டி வரி விகிதம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என அமைச்சரவை குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. ஏசி அல்லாத ஓட்டல்களுக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள 5 சதவீத வரியை 1 சதவீதமாக குறைக்க வேண்டும் எனவும், ஏசி ஓட்டல்களுக்கு தற்போது விதிக்கப்படும் 18 சதவீத ஜிஎஸ்டி வரியை 12 சதவீதமாக குறைக்க வேண்டும் எனவும் அந்த குழு பரிந்துரைத்துள்ளது.

இந்நிலையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 23வது கூட்டம் அசாம் மாநிலம் குவாஹாட்டியில் இன்று நடைபெறுகிறது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் பல்வேறு மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

இதில் சிறு வர்த்தர்கள் பயன்பெறும் வகையில் சலுகை அறிவிப்புகள் இடம் பெற வாய்ப்புள்ளது. மேலும் மக்கள் அதிகஅளவில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதம் கணிசமாக குறைக்கப்படும் என தெரிகிறது.

குறிப்பாக ஷாம்பூ உள்ளிட்ட பொருட்களுக்கான வரி விகிதங்கள் குறைப்பட வாய்ப்புள்ளது.  28 சதவீத வரி  விதிக்கப்பட்டுள்ள பல பொருட்களுக்கு 18 சதவீத வரி விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x