Last Updated : 12 Jul, 2014 09:25 AM

 

Published : 12 Jul 2014 09:25 AM
Last Updated : 12 Jul 2014 09:25 AM

உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பானுமதி உள்பட 4 பேர் பரிந்துரை

உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு, தமிழகத்தைச் சேர்ந்தவரும் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுமான ஆர்.பானுமதி உள்ளிட்ட 4 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான நீதிபதிகள் நியமனக் குழு (கொலீஜியம்) இந்தப் பரிந்துரையை அளித்துள்ளது.

பானுமதி தவிர, மூத்த வழக்கறிஞர் உதய் யு.லலித், மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிரபுல் சந்திர பந்த், குவாஹாட்டி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அபய் மனோகர் சாப்ரே ஆகியோர் பரிந்துரைக்கப்பட்ட மற்ற மூவர்கள்.

நீதிபதி ஆர்.பானுமதி தமிழகத்தைச் சேர்ந்தவர். 1998-ம் ஆண்டு மாவட்ட நீதிபதியாக நியமனம் பெற்றார். கடந்த 2003-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். கடந்த ஆண்டு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பிரேமானந்தா, நித்யானந்தா வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்தவர்.

உதய் யு லலித்

உதய் லலித் 2ஜி வழக்கில் சிபிஐ சிறப்பு அரசு வழக்கறிஞராக பணியாற்றி உள்ளார். மான் வேட்டை வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கான், கொலை வழக்கில் கிரிக்கெட் வீரர் சித்து, போலி என்கவுன்டர் வழக்கில் அமித்ஷா ஆகியோருக்காகவும் ஆஜராகி வாதாடி உள்ளார்.

பிரபுல் சந்திர பந்த்

நீதிபதி பந்த், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். கடந்த 2004-ல் உத்தரகண்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து வருகிறார்.

அபய் மனோகர் சாப்ரே

நீதிபதி சாப்ரே, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். 1999-ல் அம்மாநில உயர் நீதிமன்ற நீதிபதி ஆனார். பின்னர் ராஜஸ்தான், சத்தீஸ்கர் உயர் நீதிமன்றங்களில் பணியாற்றினார். 2013-ல் இவர் குவாஹாட்டி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார்.

இந்தப் பரிந்துரை சட்ட அமைச்ச கத்தின் ஒப்புதலுக்கு செல்லவுள்ளது. பின்னர் பிரதமரின் பார்வைக்கு வைக்கப்பட்டு, அங்கிருந்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x