Published : 28 Jul 2023 05:57 AM
Last Updated : 28 Jul 2023 05:57 AM

கியான்வாபி மசூதியில் ஆய்வு செய்ய ஆகஸ்ட் 3-ம் தேதி வரை தடை: அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு

பிரயாக்ராஜ்: கியான்வாபி மசூதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்துவதற்கு வரும் ஆகஸ்ட் 3-ம் தேதிவரை தடை விதித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கியான்வாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை அறிவியல்பூர்வமான கள ஆய்வை நடத்தி ஆகஸ்ட் 4-ம் தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வாராணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து மசூதி நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், கியான்வாபி மசூதியில் தொல்லியல் துறை ஜூலை 26-ம் தேதி வரை ஆய்வு நடத்த தடைவிதித்து உத்தரவிட்டது. அத்துடன், மசூதி நிர்வாகம் இந்த விவகாரத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தை அணுகி தீர்வு காண பரிந்துரைத்தது.

இதையடுத்து, அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரித்திங்கர் திவாகர் இந்த மனு மீது விசாரணை நடத்தி வருகிறார். அஞ்ஜுமன் இன்தெஸமியா மசூதி குழு தாக்கல் செய்த அந்த மனு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தலைமைநீதிபதி அமர்வின் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மசூதியின் தரப்பில் வழக்கறிஞர் ஆஜரானார். தொல்லியல் துறையின் சார்பில் மூத்த அதிகாரிகளும் நீதிமன்ற விசாரணையில் பங்கேற்று தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி, மசூதி நிர்வாகம் தாக்கல் செய்துள்ள மனு மீது ஆகஸ்ட் 3-ம் தேதி இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும். அதுவரை மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த நீதிமன்றம் விதித்த இடைக்கால தடை உத்தரவு தொடரும் என்று தலைமை நீதிபதி திவாகர் தெரிவித்தார்.

வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலையொட்டிய பகுதியில் கியான்வாபி மசூதி அமைந்துள்ளது. ஏற்கெனவே கோயில் இருந்த இடத்தை இடித்துவிட்டுதான் இந்தமசூதி கட்டப்பட்டதாக இந்து அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பான உண்மையை வெளிக்கொண்டு வர தொல்லியல் ஆய்வைமேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி இந்துக்கள் அமைப்பு நீதிமன்றத்தில் முறையிட்டதையடுத்து வாரணாசி மாவட்ட நீதிமன்றம் கியான்வாபி மசூதியில் ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x