Last Updated : 28 Jul, 2023 05:53 AM

 

Published : 28 Jul 2023 05:53 AM
Last Updated : 28 Jul 2023 05:53 AM

அரங்குகளை மாற்றும் நகரும் சுவர்களுடன் பாரத மண்டபம்: டெல்லியில் ரூ.2,150 கோடி மதிப்பில் பிரதமர் மோடி திறந்துவைத்தார்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் திறந்து வைத்த இந்தியாவின் மிகப்பெரிய நவீன அரங்கின் மதிப்பு ரூ.2,150 கோடி ஆகும். ஐஇசிசி எனும் இந்த அரங்கில் நகர்த்தும் சுவர்கள் உள்ளன. இந்த அரங்கம் ஜி20 மாநாட்டிற்கு தயாராக உள்ளது.

டெல்லியில் சர்வதேச மற்றும் உள்நாட்டு பொருட்காட்சிகள் மற்றும் கூட்டங்களுக்காக அமைந்திருப்பது பிரகதி மைதானம். மத்திய வர்த்தகத் துறையின் கீழ் வரும் இந்திய வர்த்தக வளர்ச்சி நிறுவனம்(ஐடிபிஒ) இம்மைதானத்தை நிர்வகிக்கிறது. சுமார் 123 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரகதி மைதானம் ரூ.2,700 கோடி செலவில் தேசியத் திட்டமாகச் சீரமைக்கப்பட்டு வருகிறது.

2017 முதல் நடைபெறும் பணியில் பிரம்மாண்டமான வகையில் பொருட்காட்சி மற்றும் மாநாடு மையம்(ஐஇசிசி) அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி நேற்று முன்தினம் திறந்து வைத்த இந்த அரங்கின் மதிப்பு ரூ.2,150 கோடியாகும்.

‘பாரத மண்டபம்’ எனும் பெயர் சூட்டப்பட்ட இந்த அரங்கில் ஒரே சமயத்தில் 7,000 பேர் அமரலாம். இது ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னியிலுள்ள 5,500 பேர் அமரக்கூடிய பிரபல ஓபரா அவுஸ் அரங்கை விடப் பெரியது. இதனுள் அமைந்துள்ள நகரும் சுவர்களை பயன்படுத்தி, மூன்று தனித்தனி அரங்குகளாகவும் மாற்றி அமைக்கலாம். இங்கு வருபவர்களின் 5,800 வாகனங்களை நிறுத்தும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.

அரங்கினுள் 10ஜி வேக இணைய வசதி, 5ஜி வைஃபை வசதிகளும் உள்ளன. உலக நாடுகளின் 19 மொழிகளை மொழிபெயர்க்கும் வசதியுடன் மொழிபெயர்ப்பாளர்களுக்கான ஹைடெக் அறைகளும் உள்ளன. ஒரே சமயத்தில் ஏழு பொருட்காட்சி அரங்குகள் அமைக்கும் வசதிகள் இங்கு உள்ளன.

என்பிசிசி எனும் நிறுவனம் பாரத மண்டபத்தை கட்டி முடித்துள்ளது. தென் கொரியா, அமெரிக்கா, ஜெர்மனி, சீனா உள்ளிட்ட ஐம்பது நாடுகளின் சர்வதேச அரங்குகளை பார்த்து அவற்றை விட சிறப்பாக இந்த அரங்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது. டெல்லி பிரகதி மைதான் மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்குவோர் பாரத் மண்டபத்திற்கு நேரடியாக வரும் வகையில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கட்டண அறைகள், டிஜிட்டல் திரை, மின்விளக்கு நீரோட்டம் உள்ளிட்ட பல கண்கவரும் அம்சங்கள் இங்கு உள்ளன.

இந்த புதிய சர்வதேச அரங்கில்தான் வரும் செப்டம்பரில் ஜி20 மாநாடு நடைபெற உள்ளது. இதில் 19 உறுப்பு நாடுகளுடன் ஐரோப்பிய நாடுகள் முழுவதும் கலந்து கொள்கின்றன. எனவே, இம் மாநாட்டின் அவசியத் தேவைக்காக 3,000 பேர் அமர்ந்து காணும் வகையில் ஒரு காட்சி அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது. ஜி20யின் நடப்பு ஆண்டிற்கு இந்தியா தலைமை வகித்துள்ளதால் அதன் சிறப்பை உலக நாடுகள் உணர இந்த ஒரு அரங்கே போதுமானது எனும் வகையில் பாரத் மண்டபம் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x