Published : 18 Nov 2017 08:39 PM
Last Updated : 18 Nov 2017 08:39 PM
‘‘ரபேல் போர் விமானங்கள் ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அமைச்சர் ஊடகங்களில் வெளியிட்ட விவரங்கள் மேலும் பல கேள்விகளை எழுப்புகின்றன’’ என்று மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.
பிரான்ஸ் நாட்டு நிறுவனத்திடம் இருந்து 36 அதிநவீன ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் விதிகள் மீறப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. இதுகுறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வெள்ளிக்கிழமை பத்திரிகையாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார்.
அப்போது, ‘‘ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பாஜக அரசு எந்த விதியையும் மீறவில்லை. பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்ட பிறகுதான் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கு முன்பு வாங்க நினைத்த போர் விமானத்தை விட ரபேல் விமானங்கள் விலையும் குறைவு’’ என்றார்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறும்போது. “அமைச்சர் நிர்மலாவின் விளக்கம் பதிலாக இல்லாமல் பல கேள்விகளை எழுப்புவதாக உள்ளது. ரபேல் விமான ஒப்பந்தத்தில், இந்தியாவுக்கு தொழில்நுட்ப பரிமாற்றம் இல்லை. ‘மேக் இன் இந்தியா’ என்று பிரதமர் மோடி கூறி வருகிறார். இதுதான் அந்த மேக் இன் இந்தியாவா? மேலும், முன்பு வாங்க திட்டமிட்ட விமான விலையை விட ரபேல் விமானங்கள் விலை குறைவு என்கிறார். ஆனால், இரண்டும் எவ்வளவு விலை என்பதை அமைச்சர் வெளிப்படையாக கூறவில்லை.
இவ்வாறு யெச்சூரி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT