Published : 08 Nov 2017 09:11 AM
Last Updated : 08 Nov 2017 09:11 AM

உள்நாட்டில் தயாரான நிர்பய் ஏவுகணை சோதனை வெற்றி

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நிர்பய் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

கடந்த 2013 மார்ச் மாதம் நடைபெற்ற நிர்பய் ஏவுகணையின் முதல் சோதனை தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து 2014 அக்டோபரில் நடந்த சோதனை முழு வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து கடந்த 2015 அக்டோபரில் நடந்த சோதனையில் 125 கி.மீ. தொலைவுக்கு மட்டுமே ஏவுகணை பாய்ந்தது. இதன்பின் கடந்த 2016 டிசம்பரில் நடந்த நிர்பய் ஏவுகணை சோதனை தோல்வியடைந்தது.

இந்நிலையில் 5-வது முறையாக ஒடிஷாவின் சண்டிப்பூர் பகுதியில் நேற்று நிர்பய் ஏவுகணை சோதனை நடைபெற்றது. இந்த சோதனை முழு வெற்றி பெற்றதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுமார் 50 விநாடிகளில் 647 கி.மீ. தொலைவு ஏவுகணை சீறிப் பாய்ந்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாக்கி அழித்தது. 6 மீட்டர் நீளம் கொண்ட இந்த ஏவுகணை 1000 கி.மீ. வரை பாயும் திறன் கொண்டது. 300 கிலோ வெடிபொருட்களை சுமந்து செல்லக்கூடியது.

இந்த ஏவுகணை அணு ஆயுதங்களையும் சுமந்து செல்லும் திறன் கொண்டதாகும். போர் ஊர்தி, போர் விமானம், போர்க்கப்பல், நீர்மூழ்கி ஆகியவற்றில் இருந்து இதனை ஏவ முடியும். இதனை ரேடாரில் எளிதில் கண்டுபிடிக்க முடியாது.

ஏவுகணை சோதனையில் பங்கேற்ற விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன தலைவர் கிறிஸ்டோபர் ஆகியோர் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x