Published : 24 Jul 2023 06:17 AM
Last Updated : 24 Jul 2023 06:17 AM

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை உயிருடன் மீட்பு

பாட்னா: பிஹார் மாநிலம் நாளந்தாவில் உள்ள குல் கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை 5 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டது.

இதுகுறித்து தேசிய பேரிடர் மீட்பு குழு அதிகாரிகள் கூறியது: சுபம் குமார் என்ற 3 வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது விவசாயி ஒருவர் தோண்டிய 40 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. இந்த தகவல் கிடைத்தவுடன் தேசிய பேரிடர் மீட்பு குழு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தது.

அதனுடன் இணைந்து இன்னும் பிற குழுக்களும் குழந்தையை மீட்க துரித கதியில் பணிகளை மேற்கொண்டன. அழுகுரலை கேட்க முடிந்ததால் குழந்தை உயிருடன் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. கேமரா மூலம் குழந்தையின் ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்பட்டது.

மேலும், ஜேசிபி இயந்திரத்தின் துணையுடன் குழந்தை சுவாசிக்க ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. சுமார் 5 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு குழந்தை ஆழ்துளைக் கிணற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டது.

இதையடுத்து, ஆம்புலன்சில் தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சைகளை வழங்கி அந்தகுழந்தையை மருத்துவமனையில் அனுமதித்தனர். இவ்வாறு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.

மத்திய பிரதேசத்தின் கஜாரி பர்கேடா கிராமத்தில் 20 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இரண்டரை வயது சிறுமி அண்மையில் மீட்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பிஹாரில் நிகழ்ந்த இதேபோன்ற மற்றொரு சம்பவத்தில் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x