Published : 21 Nov 2017 08:22 AM
Last Updated : 21 Nov 2017 08:22 AM

அயோத்தியில் கோயில்; லக்னோவில் மசூதி: உத்தரபிரதேச ஷியா மத்திய வக்பு வாரியம் யோசனை

அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோயிலும் லக்னோவில் மசூதியும் கட்டலாம் என உத்தரபிரதேச ஷியா மத்திய வக்பு வாரியம் யோசனை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வாரியத்தின் தலைவர் வாசிம் ரிஸ்வி கூறும்போது, “அயோத்தி நிலப் பிரச்சினை தொடர்பாக பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தினோம். இதன் அடிப்படையில் நாங்கள் ஒரு திட்டத்தைத் தயாரித்துள்ளோம். இதன்படி, அயோத்தியில் ராமர் கோயிலும் லக்னோவில் மசூதியும் கட்டிக் கொள்ளலாம். இதன்மூலம் நாட்டில் அமைதியும் சகோதரத்துவமும் உறுதி செய்யப்படும்” என்றார்.

அயோத்தியைச் சேர்ந்த சில மஹந்த்களுடன் வாசிம் ரிஸ்வி வரும் டிசம்பர் 5-ம் தேதிக்குள் உச்ச நீதிமன்றத்தை அணுகி, ராம் ஜென்மபூமி, பாபர் மசூதி பிரச்சினைக்கான இந்தத் தீர்வை சமர்ப்பிக்க உள்ளார். இந்த வழக்கில் அன்றைய தினம் இறுதி விசாரணை தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

ராமர் கோயில் பிரச்சினை தொடர்பாக, அயோத்தியில் உள்ள மஹந்த் தரம்தாஸ் மற்றும் மஹந்த் சுரேஷ்தாஸ் உள்ளிட்ட பல மஹந்த்களை ரிஸ்வி சமீபத்தில் சந்தித்துப் பேசினார்.

அயோத்தியில் ராமர் கோயி லும் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் வேறு பகுதியில் மசூதியும் கட்டலாம் என ஷியா வக்பு வாரியம் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முகலாயர் ஆட்சிக் காலத்தில் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் 1528-ல் பாபர் மசூதி கட்டப்பட்டது. ஆனால் அந்த இடத்தில் ராமர் கோயிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டதாக இந்து அமைப்புகள் கூறி வருகின்றன. இந்நிலையில் கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி இந்து அமைப்பினரால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x