Published : 24 Nov 2017 09:39 AM
Last Updated : 24 Nov 2017 09:39 AM

அதிபர் ட்ரம்ப் மகள் இவாங்கா ஹைதராபாத் வருகை: அமெரிக்காவின் நிபந்தனையை நிராகரித்த விமான நிலைய அதிகாரிகள்- ‘5 மணி நேரம் விமான போக்குவரத்தை நிறுத்த மறுப்பு’

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மகள் இவாங்கா ஹைதராபாத் வர உள்ளதால் சுமார் 5 மணி நேரம் வரை மற்ற விமானங்களின் போக்குவரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்ற நிபந்தனையை ஹைதராபாத் விமான நிலைய அதிகாரிகள் ஏற்க மறுத்து விட்டனர்.

அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து ஹைதராபாத் நகரில் சர்வதேச தொழில் முனைவு மாநாட்டை நடத்துகின்றன. இதற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மகள் இவாங்கா டிரம்ப், 2 நாள் சுற்றுப்பயணமாக வரும் 27-ம் தேதி ஹைதராபாத் வர உள்ளார். அங்கு நடைபெற உள்ள சர்வதேச தொழில் முனைவு உச்சி மாநாட்டில் அவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இவாங்கா வருகையை ஒட்டி, தெலங்கானா அரசு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ரகசிய பாதுகாப்பு அதிகாரிகள் ஏற்கெனவே ஹைதராபாத் வந்து நிகழ்ச்சி நடைபெறும் இடம், அவர் சுற்றிப்பார்க்கும் இடங்களில் ஆய்வு நடத்தினர், வரும் 27-ம் தேதி தனி விமானம் மூலம் ஹைதராபாத் வருகிறார் இவாங்கா.

இதையடுத்து, பாதுகாப்பு கருதி அவரது வருகைக்கு முன்பும் பின்பும் என மொத்தம் 5 மணி நேரம் வரை மற்ற விமானங்கள் தரையிறங்கவோ அல்லது புறப்படவோ அனுமதிக்கக் கூடாது என அமெரிக்க ரகசிய பாதுகாப்பு அதிகாரிகள் நிபந்தனை விதித்தனர்.

இந்த நிபந்தனையை ஏற்க முடியாது என ஹைதராபாத் விமான நிலைய அதிகாரிகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். ஹைதராபாத்தில் 5 மணி நேரம் விமானப் போக்குவரத்தை நிறுத்துவதால் ஆயிரக்கணக்கான பயணிகளின் கோபத்திற்கு ஆளாவோம்.

சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் இதை ஏற்க இயலாது என அமெரிக்காவிடம் திட்ட வட்டமாக தெரிவித்து விட்டனர்.

மேலும் பாதுகாப்பு கருதி ஷம்ஷாபாத் விமான நிலையத்துக்கு பதில், பேகம்பேட்டை விமான நிலையத்தில் வந்திறங்க உள்ளார் இவாங்கா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x