Published : 27 Nov 2017 03:26 PM
Last Updated : 27 Nov 2017 03:26 PM
குஜராத் தேர்தலில் வளர்ச்சி அரசியலுக்கும், வாரிசு அரசியலுக்கும் இடையே போட்டி நடக்கிறது என அம்மாநிலத்தில் நடந்த பிரசாரக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில், முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு, டிசம்பர் 9ம் தேதியும், இரண்டாம் கட்டமாக, 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 14ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 18ம் தேதி எண்ணப்படுகிறது.
இந்நிலையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி கட்ச் அருகே உள்ள புஜ் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது எதிர்கட்சியான காங்கிரசை மறைமுகமாக சாடினார். அப்போது அவர் கூறியதாவது:
‘‘கறைபடியாத கரத்திற்கு சொந்தக்காரரான, குஜராத் மண்ணின் மைந்தனை பற்றி இந்த மாநிலத்திற்கு வந்து சிலர் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுக்களை கூறுகின்றனர். அவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இந்த தேர்தல், வளர்ச்சி அரசியலுக்கும், வாரிசு அரசியலுக்கும் இடையே நடக்கும் போட்டி. மக்கள் நியாத்தின் பக்கம் நிற்பார்கள். டோக்லாமில் பிரச்னை எழுந்தபோது நமது ராணுவ வீரர்கள், 70 நாட்கள் கண் துஞ்சாமல் எதிர்கொண்டனர். சீன வீரர்களை கண்ணுக்கு - கண் நேராக 70 நாட்கள் எதிர்கொண்டு சமாளித்தனர். ஆனால் நீங்கள் சீன தூதரை சந்தித்து அரவணைத்தீர்கள். உங்கள் செயல்பாடுகளை மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். உங்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்பார்கள்’’ எனக்கூறினார்.
சில தினங்களுக்கு முன், குஜராத்தில் தேர்தல் பிரசாரம் செய்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ரபேல் விமான ஒப்பந்தம் உள்ளிட்டவற்றில் ஊழல் நடந்துள்ளதாக புகார் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT