Published : 09 Oct 2017 08:27 AM
Last Updated : 09 Oct 2017 08:27 AM

சிக்கிம் மாநில எல்லையில் சீன ராணுவ வீரர்களுடன் அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

சிக்கிம் மாநிலத்தில் இந்திய-சீன எல்லைப் பகுதியில் சீன ராணுவ வீரர்களை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார்.

சிக்கிம் மாநிலத்தில் சீன - இந்திய எல்லைப் பகுதிக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சனிக்கிழமை சென்றார். எல்லைப் பகுதியில் சீன ராணுவ அதிகாரியுடன் பேசினார். அவரைப் பார்த்து நிர்மலா சீதாராமன் கும்பிட்டபடி வணக்கம் என்ற பொருளில் ‘நமஸ்தே’ என்றார். பின்னர், அந்த அதிகாரியும் நிர்மலா சீதாராமனை தனது சக வீரர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

சீன ராணுவத்தினரிடம் நிர்மலா சீதாராமன் ‘நமஸ்தே’ என்றால் என்ன அர்த்தம் என்று தெரியுமா? என்று ஆங்கிலத்தில் கேட்டார். அருகில் இருந்த இந்திய வீரர்கள் பதிலளிக்க முயற்சிக்க, அவர்களை பேசாமல் இருக்குமாறு நிர்மலா சீதாராமன் தடுத்தார். நமஸ்தே என்பதற்கு சீன ராணுவ அதிகாரி ஓரளவுக்கு சரியான பதிலைக் கூறினார். ‘உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி’ என்று அர்த்தம் என்று ராணுவ அதிகாரி தெரிவித்தார். அவரிடம் நிர்மலா சீதாராமன் நமஸ்தே என்பதன் அர்த்தத்தை விளக்கினார். பின்னர், அந்த அதிகாரி சீன மொழியில் ‘நி ஹாவ்’ என்று கூறி நிர்மலா சீதாராமனுக்கு வணக்கம் தெரிவித்தார். சீன அதிகாரியின் ஆங்கில மொழித் திறனை அமைச்சர் பாராட்டினார். இந்த உரையாடல் வீடியோவை பாதுகாப்புத் துறை அமைச்சரின் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x