Published : 11 Oct 2017 02:50 PM
Last Updated : 11 Oct 2017 02:50 PM
பெங்களூரு சாலைகளில் உள்ள பள்ளங்களினால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலையை சீரமைக்காத மாநகராட்சியை கண்டித்து பாஜக, கன்னட ரக்ஷன வேதிகே உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த இரு மாதங்களாக பெங்களூருவில் பெய்துவரும் கனமழையினால் பெரும்பாலான சாலைகள் முற்றிலும் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளன. சாலைகளில் உள்ள பள்ளங்களால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கடந்த ஒரு வாரத்தில் சாலை பள்ளத்தில் தடுமாறி விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக புகார் வந்துள்ளது. ஏராளமான வாகன ஓட்டிகள் இடுப்பு வலி, கழுத்து வலி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்கக் கோரி பாஜக, கன்னட ரக்ஷன வேதிகே, பெங்களூரு மாநகர குடியிருப்புவாசிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் நேற்று பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராகவும், பெங்களூரு மாநகராட்சி நிர்வாகத்துக்கு எதிராகவும் முழக்கம் எழுப்பினர். மேலும் சாலையில் உள்ள பள்ளங்களில் செடி நட்டு, தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதனிடையே முதல்வர் சித்தராமையா, பெங்களூரு மாநகர வளர்ச்சித்துறை அமைச்சர் ஜார்ஜ் மற்றும் மாநகராட்சி ஆணையர் லட்சுமி நாராயண் ஆகியோருடன் சாலை பள்ளங்களை பார்வையிட்டார். அப்போது சித்தராமையா, '' கனமழையின் காரணமாக சேதமடைந்துள்ள சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும். பெங்களூருவில் 15 ஆயிரத்து 975 சாலை பள்ளங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதனை சீரமைக்கும் பணிகளை மாநகராட்சி ஊழியர்கள் முடுக்கி விட்டுள்ளனர். இன்னும் 15 நாட்களுக்குள் அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும்''என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT