Last Updated : 31 Mar, 2023 07:30 AM

 

Published : 31 Mar 2023 07:30 AM
Last Updated : 31 Mar 2023 07:30 AM

புவிசார் குறியீடு பெற அரசு நடவடிக்கை: அதிக சுவை, நீர் சத்து நிறைந்தது சாத்தூர் வெள்ளரி

விற்பைனக்காக வைக்கப்பட்டுள்ள வெள்ளரிப் பிஞ்சுகள். (உள்படம்) சாத்தூர் அருகே உள்ள போத்திரெட்டியபட்டியில் வெள்ளரிப் பிஞ்சு பறிப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.

சாத்தூர்: சாத்தூர் வெள்ளரியின் சுவை மற்றும் அதன் மென்மைத் தன்மையால் தனிச் சிறப்புடன் விளங்குவதாக விவசாயிகள் பெருமிதத்துடன் கூறினர்.

விருதுநகர் மாவட்டத்தில் வேளாண் விளை பொருட்களில் சிறப்புப் பெற்றது சாத்தூர் வெள்ளரி. பிஞ்சுத் தன்மை, அதிக சுவை, அதிக நீர்ச்சத்து உள்ளிட்ட காரணங்களால் சாத்தூர் வெள்ளரிக்கு என்றும் தனியிடம் உண்டு. பெரும்பாலான நட்சத்திர ஹோட்டல்களில் சாலட்களில் சாத்தூர் வெள்ளரிக்கு எப்போதும் ஓர் இடமுண்டு.

இதுகுறித்து சாத்தூர் பகுதியைச் சேர்ந்த வெள்ளரி விவசாயிகள் கூறியதாவது: பிற பகுதிகளின் வெள்ளரிகளைவிட சாத்தூர் வெள்ளரிக்கு சுவை அதிகம். மென்மையாக இருக்கும். மற்ற இடங்களைப் போல் இல்லாமல் சாத்தூரில் சாகுபடி முறை வேறுபட்டது.

சாத்தூர் பகுதியில் வெள்ளரி சாகுபடிக்கு ஏற்ப மண்ணின் வளம் உள்ளது. மேலும் நீரை தக்கவைக்கும் திறனும் உள்ளது. சாத்தூர், வன்னிமடை, நத்தத்துப்பட்டி, கோல்வார்பட்டி, போத்திரெட்டியபட்டி, நீராவிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் வெள்ளரி சாகுபடி செய்யப்படுகிறது. இதன் சுவையால் 'சாத்தூர் வெள்ளரி பிஞ்சு' என்றே அழைக்கப்படுகிறது. மற்ற பகுதிகளில் விளையும் வெள்ளரிகளில் சாத்தூர் வெள்ளரிக்கு நிகரான சுவை இருப்பதில்லை.

சாத்தூர் வெள்ளரிக்கு புவிசார் குறியீடு வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவரும் நிலையில், இந்த ஆண்டில் புவிசார் குறியீடுபெற நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசின் வேளாண் நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

கரிசல் மண்: விருதுநகர் மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: சாத்தூரில் பயிரிடப்படுவது முழுக்க முழுக்க நாட்டு இன வெள்ளரி. கரிசல் காட்டில் சாகுபடி செய்வதால் இனிப்புச் சுவை உண்டு. பொதுவாக வெள்ளரி, தர்ப்பூசணிக்கு அதிக தண்ணீர் பாய்ச்சினால் சுவை குறைவாக இருக்கும். சாத்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் மானாவாரியாக மட்டுமே வெள்ளரி 100 ஏக்கருக்கும் மேல் பயிரிடப்படுகிறது.

கோடை காலத்தில் அணை, குளம், கண்மாய்களில் தண்ணீர் வற்றும்போது அதன் ஓரப் பகுதியிலும் வெள்ளரி விதைக்கப்படும். இவ்வாறு புறம்போக்காக சுமார் 300 ஏக்கர் வரை வெள்ளரி சாகுபடி செய்யப்படுகிறது.

குறைந்த பாசனத்தால் நிறைந்த சுவை: கண்மாய்கள், குளங்களில் இருந்தும் நேரடியாக வெள்ளரி பயிருக்கு தண்ணீர் பாய்ச்சுவது கிடையாது. மாறாக தண்ணீர் எடுத்து ஊற்றுவார்கள். இதனால் குறைந்த அளவு நீர் மட்டுமே செடிக்குக் கிடைக்கிறது. இதுவே சுவை அதிகமாக இருப்பதற்கு காரணம் ஆகும்.

அரசு அறிவிப்பின்படி இந்த ஆண்டில் சாத்தூர் வெள்ளரிக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான அனைத்து முயற்சிகளும் முழுவீச்சில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ராமச்சந்திரராஜா கூறுகையில், `நமது மண்ணில் விளையும் பொருட்களுக்கு நாமே உரிமைபெற வேண்டும். சாத்தூர் வெள்ளரிக்கு புவிசார் குறியீடு வேண்டும் என தொடர்ந்து பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. காலதாமதம் இன்றி இதற்கான பணிகளை அரசு முன்னெடுக்க வேண்டும்' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x