Published : 31 Mar 2023 06:10 AM
Last Updated : 31 Mar 2023 06:10 AM

அரசுப் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தது யார்? - பேரவையில் திமுக - அதிமுக காரசார விவாதம்

சென்னை: தமிழகத்தில் காலை உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தது யார் என்பதுதொடர்பாக, திமுக, அதிமுக உறுப்பினர்களிடையே சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடந்தது.

இதுதொடர்பாக சட்டப்பேரவை யில் நேற்று நடைபெற்ற விவாதம்: அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி: கோவை மாநகருக்கு குடிநீர்ஆதாரமாக விளங்கும், சிறுவாணிஅணையின் நீர்மட்டம் வெகுவாககுறைந்துள்ளது. 50 அடி உயரத்துக்கு பதில் 11.70 அடிநீர்மட்டம் தான் உள்ளது. நாள் ஒன்றுக்கு கோவை குடிநீருக்கு 100 மில்லியன் லிட்டர் தேவைப்படுகிறது. மே முதல் வாரம் வரைதான் இதை வைத்து குடிநீர் வழங்க இயலும். கடும் வெப்பம் வாட்டும் நிலையில், 15, 20 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகிக்கப்படு கிறது.

மாற்று வழிமுறைகளில் சீரான குடிநீர் விநியோகத்துக்கு அரசும், கோவை மாநகராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பருவமழை காலத்தில் கேரளா, தமிழகத்தின் அனுமதியின்றி தண்ணீர் திறந்து விடுவதை கட்டுப்படுத்த வேண்டும். கோவையில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப்பணியை விரைவாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க, மாநகராட்சி ஆணையர் மற்றும் அட்சய பாத்திரம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, கடந்த 2019-ம் ஆண்டுஅப்போதைய ஆளுநருடன், முதல்வர் பழனிசாமி இணைந்து இத்திட்டத்தை தொடங்கிவைத்தனர். இதில் 5 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்தனர்.

பின்னர், கண்காணிப்புக் குழு அமைத்து, மாநகராட்சியில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி, 2 மண்டலங்களில் 35 ஆயிரம் மாணவர்களுக்கு உணவு வழங்க, பொது சமையல் கூடம் அமைக்க மாநகராட்சி மற்றும்அட்சயபாத்திரம் நிறுவனத்துக் கிடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டு, பூமி பூஜை போடப்பட்டது.

முன்னாள் முதல்வர் பழனிசாமியால் முதன்முதலில் காலை சிற்றுண்டித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிக்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்தது. தற்போது திமுக அரசு 15 மாநகராட்சிகள், 23 நகராட்சிகளில் காலை உணவு திட்டத்தை, 1 முதல் 5-ம்வகுப்பு வரை மட்டும் செயல்படுத்து கிறது. இந்த திட்டத்தின் பயன் கருதி,அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் உள்ள அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில், 1 முதல்12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.

அமைச்சர் கே.என்.நேரு: காலை உணவுத் திட்டத்தை நீங்கள் அறிவிக்கத்தான் செய்தீர்கள். நடைமுறைப்படுத்தவில்லை. ஆனால், இந்தியாவிலேயே முதன்முதலாக முதல்வர் ஸ்டாலின்தான் காலைஉணவுத் திட்டத்தைக் கொண்டுவந்தார். அட்சயா என்ற தனியார் நிறுவனம் மூலம்தான் நீங்கள் செயல்படுத்த முயற்சி செய்தீர்கள்.

ஆனால், திமுக அரசு மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலமாக உணவுவழங்குகிறது. முதல்வரே நேரடியாக தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு, இந்த திட்டம் குறித்து கேட்டறிந்து, குறைகளை சரி செய்து வருகிறார். ஆரம்பித்தது எங்கள் முதல்வர் ஸ்டாலின்தான். ஆனால், பெயரை மட்டும் நீங்கள் பெற முயற்சிக்கிறீர்கள். அதை எப்படி சரியாகும்?

எஸ்.பி.வேலுமணி: காலை உணவுத் திட்டத்தை ஆளுநர், முதல்வர் ஆகியோர் அட்சய பாத்திரம் நிறுவனம் மூலம் செயல்படுத்தினர்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்: அட்சய பாத்திரம் என்பது அரசுக்குச் சொந்தமான நிறுவனமல்ல; தன்னார்வ தொண்டு நிறுவனம். அதுபோன்ற நிறுவனங்கள் ஏதேனும்திட்டத்தை தினசரி கொண்டுவருவார்கள். அதைப் பெற்றுக் கொள்வது அரசின் கடமை. தன்னார்வத் தொண்டு நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்ட திட்டத்தை, அரசின் திட்டம் என தம்பட்டம் அடித்துக் கொள்வதா?

(அப்போது அமைச்சர் பேசியஒரு வார்த்தைக்கு, அதிமுக சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த வார்த்தையை பேரவைத் தலைவர் அப்பாவு அவைக் குறிப்பிலிருந்துநீக்கினார்.)

எஸ்.பி.வேலுமணி: அட்சய பாத்திரம் என்பது தனியார் நிறுவனம்தான். மாநகராட்சியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டது குறித்துதான் தெரிவித்தேன். நீங்கள் செய்வதை நாங்கள் மறுக்கவில்லை. அதேபோல, திமுகவின் தேர்தல் அறிக்கையில் அனவருக்கும் கல்விக் கடன், நகைக்கடன் ரத்து, ரூ.100 காஸ் மானியம் என அறிவித்து, ஆட்சியில் அமர்ந்த பின்னர் அனைவருக்கும் என்பது, தகுதியுள்ளவர்களுக்கு என்று மாறியுள்ளது.

2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 மகளிர் உரிமை தொகையை, 21 மாத நிலுவையுடன் வழங்க வேண்டும். அதிமுக அரசின்திட்டங்களை தடையின்றிச் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x