Last Updated : 10 Mar, 2023 06:06 AM

 

Published : 10 Mar 2023 06:06 AM
Last Updated : 10 Mar 2023 06:06 AM

காட்டுத் தீயில் ஆயிரக்கணக்கான தாவரங்கள் கருகியதால் கொடைக்கானலில் கருப்பு நிற பாறைகளாக மாறிய மலைகள்

கொடைக்கனல் பெரும்பள்ளம் பகுதியில் காட்டுத் தீயில் தாவரங்கள் கருகியதால் கருப்பு பாறைகளாக காட்சியளிக்கும் மலைகள்.

கொடைக்கானல்: கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக, தொடர்ந்து எரிந்து வந்த காட்டுத் தீயில் தாவரங்கள் கருகியதால் பசுமையாக இருந்த மலைப் பகுதிகள் கருப்பு நிறப் பாறைகளாக காட்சி அளிக்கின்றன.

கொடைக்கானல் மலைப் பகுதியில் கோடை காலத்தில் வனப் பகுதியில் காய்ந்த சருகுகளில் காட்டுத்தீ அவ்வப்போது பற்றி எரிவது வழக்கம். இந்த ஆண்டு கோடை சீசன் தொடங்கும் முன்பே கொடைக்கானல், தாண்டிக்குடி வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கத்தால் சருகுகளில் திடீரென தீப்பற்றி காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது.

இதில் பல ஏக்கர் பரப்பில் அரிய வகை மரங்கள், தாவரங்கள் கருகி வருகின்றன. இந்த காட்டுத்தீ இரவு நேரங்களில் மலையடிவாரப் பகுதியில் இருந்து பார்ப்ப வர்களுக்கு கொடைக்கானல் மலைப் பகுதிகளில் ஜோதி ஏற்றியதுபோல் காட்சியளிக்கிறது. நேற்று முன்தினம் இரவு கொடைக்கானல் பெருமாள் மலை, பெரும்பள்ளம் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை வனத்துறையினர் போராடி அணைத்தனர்.

பெரும்பள்ளம் முதல் வடகவுஞ்சி பகுதி வரை காட்டுத் தீயில் தாவரங்கள், பசுமை புற்கள் கருகியதால் பசுமையாக இருந்த மலைப்பகுதிகள் கருப்பு நிறப் பாறைகளாக காட்சி அளிக்கின்றன. வெயிலில் இருந்து தப்பிக்க, குளுமையை அனுபவிக்க கொடைக் கானலுக்கு படையெடுக்கும் சுற் றுலாப் பயணிகள் கருகி கிடக்கும் வனப்பகுதியை பார்த்து வேதனை அடைகின்றனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது: கொடைக்கானல் வனப்பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஏற்பட்ட காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

கொடைக்கானல் மலைப் பகுதியில் எந்த இடத்தில் தீ பிடித்துள்ளது என்பதை உடனுக் குடன் அறிந்து, தகவல் கொடுக்க வசதியாக மயிலாடும்பாறையில் வனப் பணியாளர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காட்டுத் தீ பிடித்ததும் அணைப்பதற்கு தீத்தடுப்பு காவலர்கள் தயார் நிலை யில் உள்ளனர். வனப்பகுதியிலோ, தனியார் தோட்டத்திலோ தீ வைக்கக் கூடாது எனவும், காட்டுத்தீ பிடித்தால் தகவல் தெரிவிக்கவும் மலைவாழ் மக்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம், என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x