Published : 05 Feb 2023 04:13 AM
Last Updated : 05 Feb 2023 04:13 AM

பாலக்கோடு வனச் சரகத்தில் வனப்பகுதியிலேயே சுற்றும் ஒற்றை யானை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதில் தாமதம்

பிரதிநிதித்துவப் படம்

தருமபுரி: பாப்பாரப்பட்டி அருகே ஒற்றை யானை வனப்பகுதியிலேயே நடமாடுவதால், மயக்க ஊசி செலுத்தி யானையை பிடிக்கும் பணியில் தாமதம் நிலவுகிறது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனச் சரகத்தையொட்டி உள்ள விளைநிலங்களில் ஒற்றை யானை நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவதுடன், கிராம மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து இடம் மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.

இதையடுத்து, வனத்துறையினர் உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதலுடன் மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்துச் செல்ல ஏற்பாடு செய்தனர். இதற்காக, கடந்த 2-ம் தேதி இரவு பாப்பாரப்பட்டி அடுத்த கிட்டம்பட்டி பகுதியில் யானையை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க மருத்துவர்கள் குழுவினரும், வனத்துறை குழுவினரும் முகாமிட்டிருந்தனர்.

வனத்தில் இருந்து விளைநிலங்களை நோக்கி யானை வரும்போது தான் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியும் என்பதால் அதற்காக குழுவினர் காத்திருந்தனர். ஆனால், அன்று இரவு முழுக்க மக்னா யானை வனத்தில் இருந்து வெளியில் வரவில்லை. கடந்த 3-ம் தேதி காலை கோவை ஆனைமலையில் இருந்து சின்னதம்பி என்ற கும்கி யானை கொண்டு வரப்பட்டது.

இருப்பினும், 3-ம் தேதியும் யானை வனத்துக்குள்ளேயே நடமாடியது. நேற்று கிட்டம்பட்டி பகுதியில் இருந்து மெதுவாக கோடுபட்டி பகுதி வனத்தை நோக்கி ஒற்றை யானை நகரத் தொடங்கியது. எனவே, நேற்று மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், மயக்க ஊசி செலுத்தும் மருத்துவர்கள் குழுவினர் மற்றும் வனத்துறை குழுவினர் தற்போது கோடுபட்டியை ஒட்டிய பகுதிக்கு முகாமை மாற்றியுள்ளனர்.

இதற்கிடையில் கும்கி யானை சின்னத்தம்பி கிட்டம்பட்டி பகுதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. ஒற்றை யானை வனத்தையொட்டிய பகுதியை நோக்கி நகரத் தொடங்கினால், மயக்க ஊசி செலுத்துவதற்காக மக்னாவை ஈர்க்க அப்பகுதிக்கு கும்கி கொண்டு செல்லப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x