Last Updated : 06 Sep, 2022 06:57 PM

 

Published : 06 Sep 2022 06:57 PM
Last Updated : 06 Sep 2022 06:57 PM

பிளாஸ்டிக் தடை அமல் | குழு அமைத்து கண்காணிப்பு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

பிரதிநிதித்துவப் படம்.

மதுரை: தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவு முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்பது குறித்து தலைமைச் செயலாளர் தலைமையில் அனைத்து துறை செயலாளர்கள் அடங்கிய குழு அமைத்து கண்காணிக்கப்படுகிறது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் அனைத்து வகையான பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கக் கோரி பலர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். அதில், ''தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதித்து சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் 2018-ல் அரசாணை பிறப்பித்தார். அதில் எவ்வகையான பிளாஸ்டிக்களை பயன்படுத்தலாம், எவற்றை பயன்படுத்தக்கூடாது என்பது சரியாக தெரிவிக்கப்படவில்லை. பால் பாக்கெட்டுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தண்ணீர் பாக்கெட்டுகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

மிகக் குறைந்த தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தலாமா? அவற்றை தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்குவது குறித்த தகவலும் அரசாணையில் இல்லை. இதனால் தமிழக மக்கள் எந்தெந்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தலாம்? எவற்றை பயன்படுத்தக் கூடாது என்பதில் குழப்பம் அடைந்துள்ளனர். எனவே பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்த தனி குழு அமைக்கவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக தடை செய்தும் உத்தரவிட வேண்டும்'' என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாஸ்கரன் வாதிடுகையில், ''தமிழகத்தில் பிளாஸ்டிக் தடையை கண்காணிக்கவும், அமல்படுத்தவும் தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைத்து 2022 பிப்ரவரி மாதத்தில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு பிளாஸ்டிக் தடையை கண்காணித்து வருகிறது.

இந்த குழுவில் அனைத்து துறை செயலாளர்கள், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் உட்பட 19 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இக்குழு 2 மாதத்துக்கு ஒரு முறை கூடி பிளாஸ்டிக் தடை குறித்து விவாதித்து வருகிறது. மேலும், பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த மாவட்டம், மாநகராட்சி, ஊராட்சி ஒன்றிய அளவில் குழு அமைக்கப்பட்டு பிளாஸ்டிக் தடை கண்காணிக்கப்படுகிறது'' என்றார். பின்னர், நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x