Last Updated : 06 Sep, 2022 06:13 PM

 

Published : 06 Sep 2022 06:13 PM
Last Updated : 06 Sep 2022 06:13 PM

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் - விசாரணை ஆணையத்துக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு

உயர் நீதிமன்றம், மதுரைக் கிளை.

மதுரை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரிக்க உயர் நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அப்போதைய அரசு அமைத்தது. நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணையை முடித்து சில நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பித்தார்.

அருணா ஜெகதீசன் ஆணையம் அமைக்கப்பட்டபோது, அந்த ஆணையத்தை ரத்து செய்யக் கோரி தூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலர் அர்ஜூனன் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், விசாரணை ஆணையம் முறைப்படி அமைக்கவில்லை. நீதிபதி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான நேரடி சாட்சிகளை மட்டுமே விசாரணைக்கு அழைத்துள்ளார். மே 22-ல் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மட்டுமே விசாரிப்பதாக ஆணையம் தெரிவித்துள்ளது. மே 23, 24 ஆகிய நாட்களிலும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. இது குறித்து விசாரிப்பதாக தெரிவிக்கவில்லை. இதனால் விசாரணை ஆணையத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணையை முடித்து அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x