Published : 26 Aug 2022 09:32 AM
Last Updated : 26 Aug 2022 09:32 AM

தொடர் மழையால் பசுமைக்கு திரும்பிய முதுமலை: சாலையோரங்களில் திரியும் வன விலங்குகள்

நீலகிரி மாவட்டத்தில் பெய்த பரவலான மழையால் வனங்களில் பசுமை திரும்பியுள்ளது. இதனால் முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

நீலகிரியில் சமீபத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்தது. இதனால் மாவட்டத்தின் முக்கிய அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. குந்தா,கெத்தை, எமரால்டு, பைக்காரா,கிளன்மார்கன் அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால், குந்தா, பில்லூரில் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என வருவாய் துறையினர் அறிவித்தனர்.

தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில், நீலகிரி மாவட்ட வனப்பகுதிகள் எங்கும்பச்சைப்பசேல் என காட்சியளிக்கின்றன. கடந்தாண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஏற்பட்ட பனிப்பொழிவால் வனங்களில் பசுமை குறைந்து வறட்சிநிலவியபோது, சில பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டது. மேலும், வனவிலங்குகள் உணவு மற்றும் நீர் தேடி கேரளா, கர்நாடகா வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்தன.

இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழையால் முதுமலை, சீகூர் மற்றும் சிங்காரா வனச்சரகங்களில் பசுமை திரும்பியுள்ளது. மேலும், நீர் நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் மூலம் வனங்களில் குட்டைகள் மற்றும் குளங்கள் நிரம்பி வன விலங்குகளின் தண்ணீர் தேவை பூர்த்தியாகி வருகிறது.

இதனால் கோடை காலத்தில் இடம் பெயர்ந்த வன விலங்குகள்மீண்டும் தமிழக வனப்பகுதிகளுக்கு திரும்பி வருகின்றன. குறிப்பாக முதுமலை புலிகள் காப்பகம் முழுவதும் மழை பெய்து வனத்தில் பசுமை திரும்பி புல் மற்றும்தாவரங்கள் வளர்ச்சி அதிகரித்துள்ளது. இதனால் வன விலங்குகளின் உணவுத் தேவையும் பூர்த்தியாகியுள்ளது.

இதன் காரணமாக முதுமலையில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. முதுமலையை கடந்து செல்லும் கூடலூர்-மைசூர் சாலையோரங்களில் யானைகள், மான்கள் மற்றும் காட்டெருமைகள் கூட்டமாக வலம் வருகின்றன.

யானைகள், காட்டெருமைகள், மான்கள்,மயில்கள் என விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், புலிகள் காப்பகத்தினுள் சவாரிசெல்லும் சுற்றுலா பயணிகள் இவற்றை கண்டு ரசித்து வருகின்றனர்.

சாலையோரங்களில் விலங்குகள் வலம் வருவதால், அவற்றை தொந்தரவு செய்யாமல் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும் என்றும், வன விலங்குகளை கண்டால் செல்ஃபி எடுக்க கூடாது.

செல்ஃபி எடுப்பவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் வனத் துறையினர் எச்சரித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x