Published : 13 Mar 2024 01:14 PM
Last Updated : 13 Mar 2024 01:14 PM

தமிழக கடற்பகுதியில் உயரும் வெப்பநிலை: ஆபத்தில் மன்னார் வளைகுடா பவள பாறைகள்

வெப்பமயமாவதால் பாதிப்புக்குள்ளாகும் பவளப் பாறைகள்.

ராமேசுவரம்: தமிழக கடற்பகுதியில் வெப்ப நிலை அதிகரிப்பால் மன்னார் வளைகுடா பவளப் பாறைகள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உலக அளவில் 738 உயிர்க்கோளக் காப்பகங்கள் உள்ளன. இந்தியாவில் மட்டும் 18 உயிர்க்கோளக் காப்பகங்கள் உள்ளன. இதில் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகம் தமிழகத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் 560 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளன. இதுதான் நாட்டில் நிறுவப்பட்ட முதல் கடல்சார் உயிர்க்கோள காப்பகம் ஆகும். மன்னார் வளைகுடாவில் கோரி தீவு, குருசடை தீவு, புள்ளிவாசல் தீவு, பூமரிச்சான் தீவு, மனோலி தீவு, மனோலிபுட்டி தீவு, முயல் தீவு உட்பட 21 தீவுகள் உள்ளன. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 14 தீவுகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 7 தீவுகளும் உள்ளன.

பல்லுயிர்களின் தாயகம்: இங்கு கடற்புற்கள், பாசிகள், சங்குகள், பவளப்பாறைகள், மீன்கள், கடல் பசு, டால்பின், திமிங்கலம் உள்ளிட்ட பாலூட்டிகள் என 4, 223 பல்லுயிர்கள் வாழ்வதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால், மன்னார் வளைகுடா கடற்பகுதி பல்லுயிர்களின் தாயகம் என அழைக்கப்படுகிறது.

சமீபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் ( NOAA ) பவளப் பாறை கண்காணிப்பு அமைப்பு, தமிழகத்தின் மன்னார் வளைகுடாவில் கடல் மேற்பரப்பின் வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருப்பதால் அங்குள்ள பவளப்பாறைகள் அழியும் அபாயம் உள்ளதாக சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

செந்தில்வேல்

இது குறித்து மீனவர் தொழிலாளர் சங்கத்தின் (ஏஐடியுசி) மாநிலச் செயலாளர் செந்தில்வேல் கூறியதாவது, மன்னார் வளைகுடா கடலில் 132 வகையான பவளப்பாறைகள் காணப்படுகின்றன. இவை கடல் உயிரினங்கள், தாவரங்களைச் சமநிலையில் வைத்திருக்கவும். கடலோரப் பகுதிகளை இயற்கைப் பேரிடர்களில் இருந்து பாதுகாக்கும் அரணாகவும் உள்ளன. ஆனால், பவளப்பாறைகள் கடத்தல், கடல்நீர் மாசுபடுதல், வரைமுறையற்ற மீன்பிடித்தல், தொழிற்சாலைக் கழிவு களால் கடலில் அமிலத்தன்மை அதிகரித்தல் ஆகியவற்றால் அழிந்து கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு மார்ச் மாதத்தி லிருந்தும் கடல் நீரின் வெப்பநிலை 32-ல் இருந்து 36 டிகிரி வரை உயர்கிறது. இதனால், பவளப்பாறைகள் பாதிக்கப்பட்டு கரை ஒதுங்குகின்றன. பவளப் பாறைகள் பாதிக்கப் படுவதால் ஏதோ கடல் சார்ந்த பிரச்சினை இதனால் நிலத்தில் வசிப்போருக்கு ஏதும் பாதிப்பு இல்லை என்று கருதிவிடக் கூடாது. இது நேரடியாக தலைநகர் சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரையிலும் கடலோர மாவட்டங்களில் உள்ளவர்களின் வாழ்விலும் வரும் காலங்களில் தாக்கம் செலுத்தக் கூடியது.

மன்னார் வளைகுடா கடற்பகுதியில் கடல் பசு மற்றும் டால்பின்களை காக்க கடற்பசு பாதுகாப்பகம், டால்பின் திட்டம் ஆகியவற்றை தொடங்கி உள்ள தமிழக அரசு மன்னார் வளைகுடாவில் பவளப் பாறைகளைப் பாதுகாக்க முதற்கட்டமாக 21 தீவுகளைச் சுற்றி பவளப்பாறை மறு உருவாக்கம் மற்றும் செயற்கை பவளப்பாறை நிறுவுதல், பவளப்பாறைகள் பாதுகாத்தல் மற்றும் விழிப் புணர்வுத் திட்டங்களை மேற் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x