Published : 12 Mar 2024 05:31 PM
Last Updated : 12 Mar 2024 05:31 PM

ரூ.2 கோடி திட்டம் வீண் - கோரிப்பாளையம் பாலம் பணியால் அகற்றப்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: கோரிப்பாளையம் பாலம் பணியால் ரூ.2 கோடியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அமைத்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அகற்றப்பட உள்ளது. சித்திரைத் திருவிழா நேரத்தில் மாநகராட்சியின் இந்த முடிவால் வைகை ஆறு மாசு அடைய வாய்ப்புள்ளது.

சென்னைக்கு அடுத்து பெரிய மாநகராட்சியாக மதுரை திகழ்கிறது. 20 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். ஆனால், சாலை, சுகாதாரம், குடிநீர் போன்ற மக்களுக்கான அடிப்படை வசதிகள் இன்னும் முழுமையடையாமல் உள்ளது. மதுரைக்கு பிறகு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நகரங்கள், தற்போது பெரும் வளர்ச்சியடைந்துள்ளன. ஆனால், மதுரை மாநகரம், தற்போதும் கிராமங்களை உள்ளடக்கிய பெரிய கிராமமாகவே உள்ளது. மாநகராட்சிப் பகுதிக்குட்பட்ட வைகை ஆற்றங்கரையை ஓட்டிய பழைய மாநகராட்சிப் பகுதிகளில் இன்னும் முழுமையான பாதாளசாக் கடை வசதியில்லை.

அப்படியே இருந்தாலும், அவை பராமரிப்பு இல்லாமல் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குப்பை பராமரிப்பு, கழிவு நீர் சுத்திகரிப்பில் மதுரை மாநகராட்சி இன்னும் பின் தங்கியே உள்ளது. வைகை ஆற்றில் கடந்த காலத்தில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் நகர்பகுியில் இருந்து கழிவு நீர் கலந்தது.

தற்போது ஒரளவு கட்டுப் படுத்தப்பட்டாலும், நகர் பகுதியில் இன்னுமே கழிவு நீர் கலப்பதை மாநகராட்சி, பொதுப் பணித் துறையால் தடுக்க முடியவில்லை. மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை சந்திப்பு அருகே செல்லூர் பந்தல் குடி கால்வாயை ஒட்டி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வைகை ஆற்றில் கழிவு நீர் கலக்காமல் இருக்க தினமும் 2 எம்எல்டி கழிவு நீர் சுத்திகரிக்கும் நிலையம் ரூ.2 கோடியில் அமைத்தது.

ஆனால், வைகை ஆறு பகுதியில் தினமும் இதை விட அதிகளவு கழிவு நீர் சுத்திகரிக்க வேண்டிய தேவை உள்ளது. அதனால், இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் குறைவான கழிவு நீரையே சுத்திகரிப்பு செய்ய முடிந்தது. அதனால், மற்ற கழிவு நீர் முழுவதும், நேரடியாக வைகை ஆற்றில் கலந்து கொண்டிருக்கிறது. அதனால், இப்பகுதியில் எந்த நோக்கத்திற்காக சுத்திரிப்பு நிலையம் அமைக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவடையாமல் முழுமையாக கழிவு நீரை செல்லூர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்ய முடியாமல் ஆற்றில் திறந்துவிடப்படுவதால் மாநகராட்சி ரூ.2 கோடியில் அமைந்த செல்லூர் சுத்திகரிப்பு நிலையமும், அதற்கு ஓதுக்கிய ரூ.2 கோடி நிதியும் வீணாகியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், தற்போது கோரிப்பாளையம் பகுதியில் செல்லூர் பந்தல் குடி கால்வாய் பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்த சாலையிலும், தல்லாக் குளம் சாலையிலும் மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் உயர்மட்டம் பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கி நடக்கிறது. இந்த பணியால் ஏற்கணவே குறைவான அளவு கழிவு நீரை சுத்திகரித்துக் கொண்டிருந்த சுத்திகரிப்பு நிலையம் தற்போது முற்றிலும் கழிவு நீர் சுத்திகரிக்கும் பணியை நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில், மேம்பாலம் பணிக்காக இந்த சுத்திகரிப்பு நிலையம் அப்புறப்படுத்தப் படப்பட உள்ளது.

இந்த சுத்திகரிப்பு நிலையம் அப்புறப்படுத்தினால் வைகை ஆற்றில் 100 சதவீதம் கழிவு நீரும் நேரடியாக கலக்கும். அதனால், வைகை ஆறு நிலை இன்னும் மோசமடையும். அதனால், வைகை கரையிலே, மற்றொரு இடத்தில் உடனடியாக சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். விரைவில் சித்திரைத் திருவிழா வர உள்ள நிலையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் ஆழ்வார்புரம் பகதியில் அதிகளவு கழிவு நீர் கலக்கும் வாய்ப்புள்ளது. அதனால் மாநகராட்சி நிர்வாகம் போர்காலம் அடிப்படையில் வைகை ஆற்றில் கழிவு நீர் கலக்காமல் இருக்க மாற்று கழிவு நீர் சத்திகரிப்பு நிலையம் திட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "கழிவுநீர் சுத்திகரிப்பது முழுமையாக நிறுத்தப்படவில்லை. சுத்திகரிப்பு முன்பை விட குறைந்துள்ளது. விரைவில் மற்றொரு இடத்தில் நிறுவுவதற்காக இந்த சுத்திகரிப்பு நிலையம் அகற்றப்பட உள்ளது." என்றார். அதனாலே, ஆழ்வார் புரம் பகுதியில் கழிவு நீர் வைகை ஆற்றில் கலப்பதை தடுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "ஆணையூர், மீனாட்சி புரம் பகுதியில் "ஸ்மார்ட் சிட்டி" திட்டத்தில் முழுவதும் பாதாள சாக்கடை குழாய் அமைக்கும் பணி நடக்கிறது. செல்லூர் மீனாட்சிபுரம் கணமாய் வரும் கழிவுநீர், இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்படுகிறது. இந்த தண்ணீர் மாநகராட்சி பூங்காக்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மீதமாகும் தண்ணீர் வைகை ஆற்றில் திறந்துவிடுகிறோம். இந்த தண்ணீரும், தற்போது சுத்திகரிக்க முடியாமல் வைகை ஆற்றில் கலக்கும் கழிவு நீரும் சேர்ந்து வருவதால் அதிகமான கழிவுநீர் ஆற்றில் கலப்பதாக தெரியும்.

ஆனால், பெருமளவு கழிவு நீர் வைகை ஆற்றில் கலப்பதை நிறுத்திவிட்டோம். செல்லூர் கழிவு நீர் பம்பிங் ஸ்டேஷனில் சுத்திகரிக்க முடியாத கழிவு நீரை "பம்" செய்து முந்திரி தோப்பில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக புதிதாக கழிவு நீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆணையூர், மீனாட்சிபுரம் பகுதியில் பாதாள சாக்கடை அமைத்து முடிந்ததும் வைகை ஆற்றில் நிரந்தரமாக கழிவு நீர் கலப்பதை தடுக்கப்பட்டுவிடும்." என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x