Last Updated : 16 Jun, 2023 07:57 PM

 

Published : 16 Jun 2023 07:57 PM
Last Updated : 16 Jun 2023 07:57 PM

புதுச்சேரி கடற்கரையில் திடீரென பல அடி ஆழத்துக்கு மணல் அரிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி பழைய துறைமுகப் பாலம் அருகேயுள்ள புதுச்சேரி கடற்கரையில் பல அடி ஆழத்துக்கு மணல் அரிப்பு திடீரென்று ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆய்வு செய்து, நாளை தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் மற்றும் புவி அறிவியல் அதிகாரிகள் வரவுள்ளதாக தெரிவித்தார்.

புதுச்சேரி கடற்கரையில் கடலரிப்பைத் தடுக்கவும், செயற்கை மணல் பரப்பை உருவாக்க கடந்த 2017 ம் ஆண்டு அரசு முடிவு செய்து, மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகம் மற்றும் தேசிய பெருங்கடல் தொழில் நுட்ப நிறுவனம், தேசிய கடலோர ஆய்வு மையத்தின் உதவியுடன் தலைமை செயலகம் அருகே பல கோடி செலவில் செயற்கை மணற்பரப்பு உருவாக்கப்பட்டது. இதற்காக 125 மீட்டர் நீளம், 100 மீட்டர் அகலத்தில் முக்கோண வடிவில் உட்கட்டமைப்பு கடலில் ஏற்படுத்தப்பட்டது.

இருப்பினும் மணல் திட்டுபோன்று வடக்கு பகுதியில் மட்டுமே கடற்கரை மணல் பரப்பு உருவாகியுள்ளது. கடற்கரை சாலை முழுவதும் மணற்பரப்பு உருவாக பழைய துறைமுகம் அருகே தெற்கு பக்கமும் செயற்கை மணற்பரப்பிற்கான அடித்தளம் உருவாக்கப்பட்டது. மேலும், துறைமுக முகத்துவாரத்தில் தூர்வாறும் மணலை கொண்டு செயற்கைத் திட்டு உருவாக்கப்பட்டது. கீழே பெரிய பாறைகளை போட்டு மேலே மணல் பரப்பப்பட்டது. இதனால் காந்தி சிலையில் இருந்து தெற்கு பழைய துறைமுக பாலம் வரை மணல் திட்டு உருவாகி இருந்தது.

ஆனால், கடல் திடீரென சொரப்பு ஏற்பட்டு மணல் அரிக்கப்பட்டு கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டது. பல அடி உயரத்துக்கு பழைய துறைமுக பாலம் அருகே உருவாக்கப்பட்ட செயற்கையாக கொட்டப்பட்டிருந்த மணல் பரப்பு 800 மீட்டர் வரை கடலுக்குள் இன்று அடித்து செல்லப்பட்டுள்ளது..ஏற்கெனவே கடல் அரிப்பை தடுக்க போடப்பட்ட பாறைகள் வெளியே தெரிகிறது. கடற்கரைப் பாதையில் நடந்து செல்லும் திடீரென்று பல அடிக்கு மணல் அரிப்பு உருவாகியுள்ளது.

ஒரே இரவில் மணல் அரிப்பு ஏற்பட்டது குறித்து அறிவியல் தொழில்நுட்ப துறை மற்றும் துறைமுக துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் நேரில் வந்து இன்று மாலை ஆய்வு செய்தார்.

அதைத் தொடர்ந்து அமைச்சர் லட்சுமி நாராயணன் கூறுகையில், "ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கடற்கரை காற்று வீசும் தன்மை மாறும். ஜூனில் இந்நிகழ்வு நடக்கும். தற்போது அதிகளவில் நடந்துள்ளது. தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்திடம் தெரிவித்துள்ளோம். கடலோரச் சூழலை கண்காணிக்கும் மத்திய அரசின் எர்த் சயின்ஸ் அதிகாரிகளிடமும் தெரிவித்துள்ளோம். நாளை புதுச்சேரி வந்து ஆய்வு செய்யவுள்ளனர். செயற்கை மணல் பரப்பு ஒரு பகுதியை தலைமைச்செயலகத்தில் 2017-ல் ஆரம்பித்தோம். இப்பகுதியில் புதுச்சேரி அரசை செய்ய சொன்னார்கள்.

இப்பகுதியையும் மத்திய அரசே செயற்கை மணல் பரப்பை உருவாக்க தெரிவித்தோம். கடல் அரிப்பை உருவாக்க திட்டத்தையும் தயாரிக்க கோரியுள்ளோம். இடைக்காலமாக பிள்ளைச்சாவடியில் ரூ.40 லட்சத்தில் கடலில் கல் கொட்டுகிறோம். நிரந்தரமாக கடல் அரிப்பை தடுக்க மத்திய அரசு உருவாக்க வேண்டும். மாநில அரசுக்கு தனியாக இத்திட்டத்தை உருவாக்க வாய்ப்பில்லை. தொடர்ந்து துறைமுகத்தில் தூர்வாரப்படும் மணலை இவ்விடத்தில் கொட்டவேண்டும். ஆகஸ்ட்டில் இருந்து துவங்குவோம்.

கடல் அரிப்புக்கு போகும் மணலை ஈடு செய்ய முடியும். தீடீர் கடல் அரிப்பு ஏற்பட்ட இப்பகுதியில் பயணிகள் வராமல் தடுக்க பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x