Published : 16 Feb 2021 03:12 AM
Last Updated : 16 Feb 2021 03:12 AM

தேர்தலில் போட்டியிட விருப்ப மனு: அதிமுக, திமுக, மநீம கட்சிகள் அறிவிப்பு

அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிவிப்பில், அதிமுக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்பும் கழகத்தினர், தலைமைக் கழகத்தில் வரும் பிப்.24-ம் தேதி முதல் மார்ச் 5-ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பக் கட்டணமாக, தமிழகத்தில் போட்டியிட ரூ.15 ஆயிரம், புதுச்சேரி மாநிலத்தில் ரூ.5 ஆயிரம், கேரளாவில் ரூ.2 ஆயிரம் செலுத்தி விருப்ப மனு விண்ணப்பப் படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து மீண்டும் தலைமைக்கழகத்தில் வழங்க வேண்டும் என கூறியுள்ளனர்.

இதேபோன்று, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினர் தலைமைக் கழகத்தில் ரூ.1,000-க்கு விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். நாளை (பிப்.17) முதல் 24-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பொதுத் தொகுதிக்கு ரூ.25,000, மகளிர்க்கும் மற்ற தனித் தொகுதிக்கும் ரூ.15,000 விண்ணப்பக் கட்டணம்’’ என்று தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட வருகிற 21-ம் தேதி முதல் விருப்ப மனு தரலாம் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். ‘‘ஆன்லைனிலேயே (www.maiam.com) சுலபமாக விண்ணப்பிக்கலாம். தலைமை அலுவலகங்களில் விண்ணப்பங்களைப் பெற்று தபால் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். கட்சியின் உறுப்பினர் அல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம். ஒரு தொகுதிக்கு ஒரு முறை விண்ணப்பிக்க ரூ.25 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது’’ என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x