Published : 13 Mar 2019 05:03 PM
Last Updated : 13 Mar 2019 05:03 PM

மக்களவைத் தேர்தல்; அதிமுக  கூட்டணியில் தமாகாவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு

மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தமாகாவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான உடன்பாட்டில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

காங்கிரஸில் இருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், 2014-ல் தமாகாவைத் தொடங்கினார். 2016 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் முயற்சி தோல்வி அடைந்ததால் கடைசி நேரத்தில் தேமுதிக, மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து தமாகா போட்டியிட்டது. வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் எதிர்ப்பு காரணமாக திமுக கூட்டணியில் சேர முடியாத நிலை தமாகாவுக்கு ஏற்பட்டது.

இதனிடையே எங்களோடு பேசுவதற்கு காங்கிரஸுக்கு என்ன தயக்கம்? என்று தமாகா துணைத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் வெளிப்படையாகப் பேசினார். ஆனாலும், காங்கிரஸ் கட்சியிடம் இருந்து எந்தவிதமான அழைப்பும் தமாகாவுக்கு வரவில்லை.

எனவே, அதிமுக கூட்டணியில் இணைய ஜி.கே.வாசன் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பேச்சுநடத்தி வந்தார். அதிமுக கூட்டணியில் 3 மக்களவைத் தொகுதிகளுடன் 1 மாநிலங்களவை இடம் வேண்டும் என வாசன் கேட்டு வந்தார். ஆனால், ஒரே ஒரு மக்களவைத் தொகுதி மட்டுமே தர முடியும். அதிலும் வாசன் போட்டியிட வேண்டும் என அதிமுக திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், 2 தொகுதிகளாவது வேண்டும் என வாசன் வலியுறுத்தி வந்தார்.

இதுதொடர்பாக மாவட்டத் தலைவர்களுடன் வாசன் நேற்று ஆலோசனை நடத்தினார். அதிமுக கூட்டணியில் 2 தொகுதிகளுக்கும் குறைவாக ஏற்கக் கூடாது என்று அவர்கள் வலியுறுத்தினர். மக்களவைத் தேர்தலில் வாசன் போட்டியிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில், தொகுதிப் பங்கீடுதொடர்பாக தமாகா தலைவர் ஜி.கே.வாசனை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, அதிமுக செய்தித் தொடர்பாளர் ஜேசிடி பிரபாகர் ஆகியோர் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் சந்தித்துப் பேசினர். சுமார் 40 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பின்போது முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஸ் ஆகியோர் வாசனுடன் தொலைபேசியில் பேசினர்.

இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. தமாகாவுக்கு ஒரு தொகுதியை ஒதுக்குவது என்று இறுதி செய்யப்பட்டு அதிமுக - தமாகா இடையே இன்று உடன்பாடு கையெழுத்தானது. இதில் ஓபிஎஸ், ஈபிஎஸ், ஜி.கே.வாசன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

தமிழகத்தில் நடைபெற உள்ள 18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கும் அதிமுகவுக்கு தமாகா ஆதரவளிக்கும் என்று ஜி.கே.வாசன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x