Last Updated : 06 Mar, 2019 08:05 AM

 

Published : 06 Mar 2019 08:05 AM
Last Updated : 06 Mar 2019 08:05 AM

காங்கிரஸ் - விசிக.. தொகுதி யாருக்கு?- ‘சிதம்பர’ ரகசியம்

மக்களவைத் தேர்தலில் சிதம்பரம்(தனி) தொகுதியைப் பெறுவதில்திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடையே கடும் போட்டி நிலவுகிறது.

திமுக கூட்டணியில் 10 தொகுதிகளை காங்கிரஸ் கட்சியும் 2 தொகுதிகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பெற்றுள்ளன. இரு கட்சிகளுக்குமே சிதம்பரம் (தனி) தொகுதி முக்கியமானது என்பதால் இத்தொகுதியைப் பெற இரு கட்சிகளுமே கடும் முயற்சி மேற்கொண்டுள்ளன.

2009 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அக்கட்சித் தலைவர் திருமாவளவன் 4.28 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2014 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து போட்டியிட்டபோது அதிமுக வேட்பாளர் மா.சந்திரகாசியைவிட 1.28 லட்சம் வாக்குகள் குறைவாகப் பெற்று திருமாவளவன் தோல்வியைத் தழுவினார்.

இந்நிலையில், தற்போது நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிந்துள்ளது. தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 2 தொகுதிகளில் சிதம்பரம் (தனி) தொகுதியை கேட்டுப் பெற்று அதில் திருமாவளவன் போட்டியிட உள்ளதாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.

சிதம்பரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே 6 முறை வெற்றி பெற்றுள்ளது என்பதால், இந்த தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று திமுகவிடம் காங்கிரஸ் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம், காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் ஆகிய 5 தொகுதிகள் தற்போது அதிமுக வசம் உள்ளன. புவனகிரி திமுக வசம் உள்ளது.

சிதம்பரம் தொகுதிக்கு காங்கிரஸ் - விசிக இடையே போட்டி நிலவினாலும், கூட்டணிக் கட்சியின் தலைவர் என்ற முறையில், திருமாவளவனுக்கு முன்னுரிமை அளித்து சிதம்பரம் தொகுதி ஒதுக்கப்படலாம் என்ற நம்பிக்கையில் அக்கட்சியினர் உள்ளனர். தொகுதி யாருக்கு என்ற சிதம்பர ரகசியத்துக்கு விரைவில் விடை கிடைக்கும் என்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x