Published : 12 Mar 2019 08:45 AM
Last Updated : 12 Mar 2019 08:45 AM

‘39-லயும் நிக்கிறோம்’: மறுமலர்ச்சி ஜனதா கட்சி அறிவிப்பு

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் கூட்டணி ஓரளவு முடிந்து, தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் பல கட்சிகளும் நேர்காணல் நடத்தி வருகின்றன. இந்த பரபரப்புக்கு நடுவே, முதல்கட்டமாக 10 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை ஏற்கெனவே வெளியிட்டு, தற்போது 2-ம் கட்டமாக 5 தொகுதிகளுக்கான பட்டியலை வெளியிட்டிருக்கிறது மறுமலர்ச்சி ஜனதா கட்சி.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இக்கட்சி, 39 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாகவும் அறிவித்துள்ளது. இதுபற்றி இக்கட்சியின் மாநிலத் தலைவரான எஸ்.ஜெயக்குமார் மேலும் கூறியதாவது:

மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். எம்எல்ஏ, எம்.பி. குதிரை பேரத்தை தடுக்க, குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வர் ஆகியோரை மக்களே நேரடியாக தேர்வு செய்யும் முறையை கொண்டுவர வேண்டும். இது உட்பட மக்களுக்கு பயனுள்ள பல்வேறு திட்டங்களை முன்வைத்து பிரச்சாரம் செய்ய உள்ளோம். மக்களுக்கான கொள்கையை முன்வைக்காமல், ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும் கூட்டணியை நம்பியே தேர்தலில் நிற்கின்றன. பண பலம், ஆள்பலம், அதிகார பலத்தை எதிர்த்து நாங்கள் பிரச்சாரம் செய்வோம். வெற்றி - தோல்வி பற்றி கவலை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x