Published : 07 Mar 2019 07:51 AM
Last Updated : 07 Mar 2019 07:51 AM

அறிவிக்கும் முன்பே களமிறங்கிய ஹெச்.ராஜா, கார்த்தி சிதம்பரம்: சிவகங்கை சீமை சிக்குமா, சிக்கலாகுமா?

கே.சுரேஷ் /சுப.ஜனநாயகசெல்வம்

எந்தெந்தக் கட்சிக்கு எந்தெந்த தொகுதி என எந்தக் கட்சியும் முடிவு செய்யாத நிலையில் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கு பாஜக சார்பில் ஹெச்.ராஜாவும் காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரமும் போட்டியிடுவதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளைத் தொடங்கியுள்ளனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் புதுக்கோட்டை திமுக தெற்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.ரகுபதியை நேற்று முன்தினம் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதற்கு முன்னர் சிவகங்கை திமுக மாவட்டச் செயலாளர் கே.ஆர்.பெரிய கருப்பனையும் கார்த்தி சிதம்பரம் சந்தித்துள்ளார்.

தேர்தலையொட்டி கட்சிகளின் தலைவர்கள் மட்டத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்று வரும் நிலையில், வேட்பாளர்கள் அறிவிக்கப் படாத நிலையில், ஆதரவு கோரி தொகுதிக்குள் யாரும் களம் இறங்காத நிலையில், திமுக மாவட்டச் செயலாளர்களை கார்த்தி சிதம்பரம் சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, காங்கிரஸ் நிர்வாகிகள், 'இந்து தமிழ்' நாளிதழிடம்கூறியது: சிவகங்கை தொகுதியில்கார்த்திசிதம்பரம் உறுதியாகப் போட்டியிடுகிறார். தற்போது, காங்கிரஸ் கட்சி யைப் பொறுத்தவரை வாக்குச்சாவடி நிலையிலான கட்டமைப்பு பணி முடிக்கப்பட்டு, முதல் கட்டமாக தகவல் தொழில்நுட்ப பிரிவு  மூலம் பிரச்சாரப் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இத்தொகுதிக்கு உட்பட்ட கூட்டணிக் கட்சிகளின் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்று வருகிறது.  திமுக மாவட்டச் செயலாளர்களைத் தொடர்ந்து, திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகளையும் கார்த்தி சிதம்பரம் சந்திக்க உள்ளார் என்றனர்.

இதேபோல் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவும் சிவகங்கையை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது.

தமிழகத்தில் கழகங்கள் இல்லாதஆட்சி அமைப்போம் என சூளுரைத்தபாஜக, மக்களவைத் தேர்தலில் அதிமுக, பாமகவோடு கூட்டணி வைத்துள்ளது.  இதில் தேமுதிகவும்விரைவில் சேரும் என எதிர்பார்க் கப்படும்  நிலையில், வெற்றி வாய்ப் புள்ள சிவகங்கை மக்களவைத் தொகுதியில் களமிறங்க பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா பகீரத முயற்சி எடுத்து வருகிறார். 

2014 மக்களவைத் தேர்தலில் தேமுதிகவோடு கூட்டணி வைத்து பாஜக சார்பில் போட்டியிட்ட அவர் 1,33,763 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார். தற்போது அதிமுக கூட்டணி பலத்தால் சிவ கங்கையில்  எளிதில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையில்  காய் நகர்த்தி வருகிறார்.பிரதமர் மோடி தமிழக பிரச்சாரத்தின் போது பிரதானமொழிபெயர்ப்பாளராக செயல்படும் ஹெச். ராஜா பிரதமர் மோடி, அமித் ஷாவு டனான நெருக்கத்தை வைத்து சீட் பெற்றுவிடும் முயற்சியில் இறங்கி உள்ளார்.

2014 தேர்தலில் தனித்து போட்டி யிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 1,04,678 வாக்குகள் பெற்று நான்காம் இடம் பெற்றார். தற்போது திமுக கூட்டிணியில் காங்கிரஸ் போட்டியிடுவதால், அதற்குஎதிராக பலம் வாய்ந்த அதிமுக வோடு கூட்டணி அமைத்தது பாஜகவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத் தியுள்ளது.

இதற்காக தொகுதியில் முக்கியநிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். கட்சியின் பூத்கமிட்டி உறுப்பினர்களை சந்தித்துவருகின்றனர்.  இதன் முன்னோட்ட மாக, தொகுதிக்குள் பல இடங் களில்  பாஜகவின் தேர்தல் சின்னம்பொறிக்கப்பட்டு பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இது அதிமுகவுக்குசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் சிவகங்கை தொகுதி யில் போட்டியிடும்போது, அதனைஎதிர்த்து போட்டியிட்டால் பாஜகபலத்தை நிரூபிக்க வாய்ப்பாகஅமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு தேசிய கட்சிகளும் வரிந்து கட்டுவதால் சிவகங்கை சீமையாருக்கு என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஹெச்.ராஜாவுக்கு வாய்ப்பு தர அதிமுக எதிர்ப்பு

வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜாவுக்கு வாய்ப்பு வழங்க வேண்டாம் என அதிமுக வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதால், கடந்த 2003-ம் ஆண்டு முதல் 2014 வரை பாஜக மாநிலத் தலைவர் பதவியைப் பிடிக்கும் அவரது முயற்சிகள் பலிக்கவில்லை. இந்நிலையில் மோடி அரசு அமைந்ததும் ராஜாவின் சர்ச்சை பேச்சு மேலும் தீவிரமானது. பெரியார் சிலையைத் தகர்ப்போம் என்ற அவரது ட்விட்டர் பதிவு, கவிஞர் வைரமுத்து, திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி, உயர் நீதிமன்றம் பற்றியெல்லாம் அவர் தெரிவித்கருத்து தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இதனிடையே தற்போது மக்களவைத் தேர்தலுக்காக அதிமுக  கூட்டணியில் இணைந்த பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் ஹெச்.ராஜா போட்டியிட்டால் பாதிப்பு ஏற்படும் எனக்கூறி அவருக்கு இந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தர வேண்டாம் என பியூஷ் கோயல் உள்ளிட்ட பாஜக தலைவர்களிடம் அதிமுக வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x