Last Updated : 26 Mar, 2019 07:57 AM

 

Published : 26 Mar 2019 07:57 AM
Last Updated : 26 Mar 2019 07:57 AM

நேருவின் மகள் தந்த நிலையான ஆட்சி!

மத்தியில் காங்கிரஸ் அல்லாத முதல் அரசாக அமைந்த ஜனதா அரசு, 1980-ல் நடந்த ஏழாவது மக்களவைத் தேர்தலுடன் முடிவுக்குவந்தது. சர்வாதிகார ஆட்சிக்காக எந்த இந்திரா காந்தியைப் பதவியிலிருந்து அகற்றினார்களோ அவருக்கே வாக்களித்து ஆட்சியில் அமர வைத்தனர் இந்திய வாக்காளர்கள். இந்திரா தலைமையிலான காங்கிரஸ் 353 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்தது.

ஜனதா ஆட்சியின் முடிவுக்குப் பல காரணிகள் உண்டு. பிரதானமானது பதவிச் சண்டை. மொரார்ஜியைப் பிரதமராகத் தேர்வு செய்ததை சரண் சிங்கால் சகித்துக் கொள்ள முடியவில்லை. மொரார்ஜி கொண்டுவந்த ‘வேலைக்கு உணவு’ திட்டம், நிலவுடமையாளர்களின் எதிர்ப்புக்கு ஆளானது.  இத்திட்டத்தைக் கைவிடுமாறு மொரார்ஜியிடம் சரண் சிங் வற்புறுத்தினார். மொரார்ஜி கேட்கவில்லை. இதையடுத்து, நிதியமைச்சர் பதவியைக் கேட்டுப் பெற்ற சரண் சிங், ‘நிதி போதவில்லை’ என்று காரணம்காட்டி அத்திட்டத்துக்கு மூடுவிழா நடத்தினார். இப்படிப் பல மோதல்கள் நடந்தன. ஜனதா ஆட்சிக் காலத்தில் விலைவாசி குறைந்தது. விவசாயம் செழித்தது. இனியொருமுறை சர்வாதிகார ஆட்சி வந்துவிடாத அளவுக்கு அரசமைப்புச் சட்டத்தில் முக்கியமான திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.

நெருக்கடி நிலை அமலில் இருந்தபோது நடந்த அதிகார துஷ்பிரயோகங்களை விசாரிக்க நீதிபதி ஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால், ஜனதா கட்சிக்குள் இருந்த குழப்பத்தைப் பயன்படுத்திக் காய்நகர்த்தினார் இந்திரா. வேண்டுமென்றே தன்னை அவமானப்படுத்த ஷா ஆணையம் பயன்படுத்தப்படுவதாகக் குற்றஞ்சாட்டினார்.  ஜனதா கட்சியை உடைத்தால் சரண் சிங்கைப் பிரதமராக்குவதாக வாக்குறுதி அளித்தார். சரண் சிங்கும் அப்படியே செய்து பிரதமர் ஆனார். ஆனால் அவர் நாடாளுமன்றத்தைச் சந்திப்பதற்கு முன்னதாகவே காங்கிரஸ் தனது ஆதரவை வாபஸ் வாங்கியது. சரண்சிங் பதவி விலகினார். ஜனதா கட்சி இரண்டிரண்டாக உடையத் தொடங்கியது.

இந்தக் காரணங்களால் மக்கள் மத்தியில் எதிர்க்கட்சிகள் மீதே வெறுப்பு ஏற்பட்டது. 1980 தேர்தலில் ஜனதா கட்சி 31 தொகுதிகளிலும் சரண்சிங் தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா 41 தொகுதிகளிலும் வென்றன. காங்கிரஸுடன் கூட்டணி அமைத்த திமுக 16 மக்களவைத் தொகுதிகளில் வென்றது. ‘நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக’ என்று கருணாநிதி விடுத்த அழைப்புக்கேற்பவே இந்தத் தேர்தலின் முடிவு அமைந்தது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x