Published : 19 Mar 2019 07:55 AM
Last Updated : 19 Mar 2019 07:55 AM

15-வது ஆண்டில் நுழையும் தருணத்தில் மக்களவையிலும் அடியெடுத்து வைக்குமா தேமுதிக?- எதிர்பார்ப்புடன் பணியாற்றும் தொண்டர்கள்

தமிழகத்தில் கடந்தகால தேர்தல்களில் ஏற்ற, இறக்கங்களை சந்தித்துவரும் தேமுதிக 15-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த தருணத்தில், மக்களவையிலும் முதன்முதலாக அடியெடுத்து வைக்கும் என்ற எதிர்பார்ப்பு, தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அந்த உற்சாகத்தோடு, தேர்தல் வெற்றிக்காக முழுமூச்சாக பணியாற்றி வருகின்றனர்.

திரைப்படங்கள் மூலம் மக்களைக் கவர்ந்த நடிகர் விஜயகாந்த், கடந்த 2005 செப்டம்பர் 14-ம் தேதி மதுரையில் தேமுதிகவை தொடங்கினார். 2006 சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட்டது. இதில் விருத்தாசலம் தொகுதியில் மட்டும் வெற்றி கிடைத்தது. விஜயகாந்த் 17 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2009 மக்களவைத் தேர்தலில் அக்கட்சியின் வாக்கு சதவீதம் 10.1 ஆக உயர்ந்தது.

இதைத் தொடர்ந்து 2011 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்டது. இத்தேர்தலில் 29 தொகுதிகளில் தேமுதிக வெற்றி பெற்று, திமுகவை பின்னுக்குத் தள்ளி எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றது. விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக வுடன் கூட்டணி அமைத்து 14 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்டது. ஆனால், ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை. இதே போல, கடந்த 2016 சட்டப்பேரவை தேர்த லிலும் 104 இடங்களில் போட்டியிட்டு, ஒரு தொகுதியில்கூட வெற்றிபெறவில்லை. உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டி யிட்ட விஜயகாந்த் 34 ஆயிரம் வாக்குகள் பெற்று 3-ம் இடம் பிடித்தார்.

இத்தேர்தலில் தேமுதிக ஒட்டுமொத்தமாக 10,34,384 வாக்குகள் பெற்றது. 2009-ல் 10.1 சதவீதமாக இருந்த வாக்கு சதவீதம் 2.4 சதவீதமாக குறைந்தது. இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

இதையடுத்து, கட்சியை வலுப்படுத்த தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற் கொண்டு நிர்வாகிகளை சந்தித்து ஆலோ சனை நடத்தினார் விஜயகாந்த். பின்னர், ‘உங்களுடன் நான்’ என்ற நிகழ்ச்சி மூலம் மாவட்டம்தோறும் சென்று கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து அவர்களை உற்சாகப்படுத்தினார். இது கட்சியினரிடம் புது தெம்பை ஏற்படுத்தியது.

இவ்வாறு, கடந்த 14 ஆண்டுகளில் பல ஏற்ற, இறக்கங்களைக் கண்ட தேமுதிக இம்முறை மக்களவையில் கால் பதித்துவிட வேண்டும் என்பதில் முனைப்பாக உள்ளது. அதிமுக கூட்டணியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 4 தொகுதிகளில் கட்டாயம் வெற்றிபெற வேண்டும் என்ற இலக்கை எட்ட முழுமூச்சாக களமிறங்கியுள்ளது.

இதுகுறித்து தேமுதிக மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு அடுத்த படியாக தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு மக்கள் மத்தியில் நல்ல அபிமானமும், நற் பெயரும் உள்ளது. தேமுதிக கடந்த தேர்தல் களில் பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்துள்ளது.

அமெரிக்க சிகிச்சைக்குப் பிறகு ஓய்வில் இருக்கும் விஜயகாந்த், முக்கிய நிகழ்ச்சி களில் மட்டுமே பங்கேற்கிறார். முக்கிய இடங்களில் அவர் தேர்தல் பிரச்சாரம் மேற் கொள்வார். தேமுதிக பொருளாளர் பிரேம லதா மற்றும் விஜய்பிரபாகரன் ஆகியோர் கிராமம்தோறும் சென்று தீவிர பிரச்சாரம் மேற்கொள்வார்கள். தேமுதிக போட்டி யிடும் 4 தொகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். 15 ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ள தேமுதிக, கட்டாயம் மக்களவையிலும் அடியெடுத்து வைக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x