Published : 18 Mar 2019 08:53 AM
Last Updated : 18 Mar 2019 08:53 AM

‘பம்பரம்’ இல்லைன்னா ‘உதயசூரியன்’

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஈரோடு மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மதிமுக மாநிலப் பொருளாளரான அ.கணேசமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த தேர்தல்களில் குறிப்பிட்ட அளவுக்கு வாக்குகளைப் பெறாததால், தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை மதிமுக இழந்துள்ளது. இதனால், மதிமுக சின்னமாக இருந்த பம்பரம், தற்போது சுயேச்சை சின்னமாக மாறியுள்ளது. இதனால், கணேசமூர்த்திக்கு பம்பரம் சின்னம் கிடைக்குமா என்பது தெரியவில்லை.

இதற்கிடையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில், ‘ஈரோடு தொகுதி மதிமுக வேட்பாளர் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டால், சின்னத்தை வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்க முடியாது. அனைவருக்கும் நன்கு அறிமுகமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு மதிமுக வேட்பாளரை வலியுறுத்த வேண்டும்’ என்று இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் சு.முத்துசாமி, திமுக துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விஷயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு கணேசமூர்த்தியிடம் திமுக நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் வைகோதான் முடிவு எடுக்க வேண்டும் என கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஒருவேளை, பம்பரம் சின்னம் கிடைத்தால் அதில் போட்டியிடுவது; சுயேச்சை சின்னம்தான் ஒதுக்கப்படும் என்ற பட்சத்தில், உதயசூரியனில் போட்டியிடலாம் என மதிமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x