Published : 27 Mar 2019 06:13 AM
Last Updated : 27 Mar 2019 06:13 AM

போலி வாக்காளரை விசாரிக்க ரூ.2 கட்டணம்; ரகசியத்தை மீறினால் வாக்களிக்க அனுமதி கிடையாது: பல்வேறு நடைமுறைகளை அமல்படுத்துகிறது தேர்தல் ஆணையம்

வாக்குச்சாவடி மையங்களில் ஒருவருடைய வாக்குப் பதிவை சந்தேகித்து எதிர்ப்பு தெரிவித்தால் அதுதொடர்பாக விசாரிக்க சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி முகவரிடம் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் ரூ.2 கட்டணம் வசூலித்து விசாரணை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள், வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையம் குறிப்புகளையும், விதிமுறைகளையும் அறிவுறுத்தி உள்ளது.

அதில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:வாக்குச்சாவடி மையங்களில் அரசியல் கட்சி முகவர் ஒருவருடைய வாக்குப்பதிவை எதிர்த்து, அவர் வாக்காளர் இல்லை என்று மறுப்புத் தெரிவித்தால் அது எதிர்க்கப்பட்ட வாக்காக (Challenged Votes) கருதப்படுகிறது. மேலும், வாக்களிக்க வரும் வாக்காளரின் அடையாளம் குறித்து முகவர் எவரும் எதிர்ப்புத் தெரிவித்தால் அந்த அரசியல் கட்சி வேட்பாளரின் முகவரிடம் இருந்து ரூ.2-ஐ வசூலித்துக் கொண்டு வாக்குச்சாவடி தலைமை அலுவலர் முழு விசாரணை நடத்த வேண்டும்.

விசாரணையில் எதிர்ப்பு நிரூபிக்கப்படாவிட்டால் அந்த வாக்காளரை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். எதிர்ப்பு நிரூபிக்கப்பட்டால் முகவரிடம் வசூலித்த ரூ.2-ஐஅவரிடம் திருப்பிச் செலுத்திவிட்டு போலியாக வாக்குப் பதிவு செய்யவந்த அந்த நபரை வாக்குச்சாவடி தலைமை அலுவலர், போலீஸாரிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஏதேனும் ஒரு வாக்காளரின் வாக்கை ஏற்கெனவே எவரேனும் பதிவு செய்துவிட்டதாக தெரியவந்தால் அப்போது வாக்களிக்க வந்த வாக்காளரின் அடையாளம் தொடர்பான ஆவணங்களைச் சரிபார்த்து அவரை ஆய்வுக்குரிய வாக்குத்தாள் (Tendered Ballot paper) மூலம் வாக்களிக்க அனுமதிக்கலாம். அவரை ஈவிஎம் மூலம் வாக்களிக்க அனுமதிக்கக்கூடாது. இம்மாதிரி ஆய்வுக்குரிய வாக்காளர்களை தனியே கணக்கு வைத்து (படிவம் 17பி) வாக்குப்பதிவு முடிந்ததும் தனி உறையிட்டு சீல் வைத்து மண்டல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஒரு வாக்காளர் பற்றிய விவரங்களை 17(பி) பதிவேட்டில் பதிவு செய்து அவருக்கு அழியாத மை வைக்கப்பட்ட பின்னர், அவர் வாக்களிக்க விரும்பவில்லை என்றால் விதி 49(0)-ன் படி 17(ஏ) பதிவேட்டின் remarks காலத்தில் வாக்களிக்க விரும்பவில்லை என்று எழுதி வாக்குச்சாவடி தலைமை அலுவலர் முழு கையொப்பமிட்டு அதன் அருகில் அந்த வாக்காளரின் கையொப்பத்தைப் பெற வேண்டும்.

வாக்காளர் ஒருவர் வாக்க ளிக்கும் ரகசியத்தை மீறினால் விதி 49(எம்)-ன் படி வாக்களிக்க அனுமதிக்காமல் 17(ஏ) பதி வேட்டில் குறிப்பு (remarks) எழுதும் பத்தியில் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என்று எழுதி அவரை வாக்குச்சாவடியை விட்டு வெளியே அனுப்பிவிட வேண்டும். மேலும் பல்வேறு விதிமுறைகளை வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்த உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x