Published : 27 Feb 2019 10:19 AM
Last Updated : 27 Feb 2019 10:19 AM

நான் தேர்தலில் போட்டியிடுவேன்; தொகுதி பின்னர் அறிவிக்கப்படும்: தமிழிசை தகவல்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாஜக, பாமக கட்சிகள் கூட்டணி இதுவரை இறுதியாகியுள்ளது. இதில், பாஜகவுக்கு 5 இடங்களும், பாமகவுக்கு 7 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

பாஜகவுக்கு தூத்துக்குடி தொகுதி ஒதுக்கப்படலாம் எனவும், அத்தொகுதியில் அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில் திமுக சார்பில் அத்தொகுதியில் கனிமொழி நிறுத்தப்படுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், "எங்களுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்தத் தொகுதிகள் என்னென்ன என்பதை இனிமேல் தான் முடிவு செய்ய வேண்டும். அது முடிவானவுடன், நான் ஒரு தொகுதியில் போட்டியிடுவேன்.

நான் எந்தத் தொகுதியில் போட்டியிடுவேன் என்பதில் பல அனுமானங்கள் கிளம்பியுள்ளன. உறுதியான முடிவு எட்டப்பட்டவுடன் அதுகுறித்து அறிவிக்கப்படும்.

தேமுதிக மற்றும் புதிய தமிழகத்துடன் பாஜக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அனைத்துக் கூட்டணிக் கட்சிகளும் இணைந்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது தமிழகத்தில் கள நிலவரம் மாறும்.

பாஜக 'வகுப்புவாத அரசியல்' செய்வதாக திமுக கூறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

மதத்தின் பெயரில் இயங்கி வரும் கட்சியுடன் திமுக கூட்டணியை இறுதி செய்துள்ளது. ஆனால், அவர்கள் தங்களை மதச்சார்பற்ற கூட்டணி என்கிறார்கள்.  மு.க.ஸ்டாலின் கட்டுப்பாடு இன்றிப் பேசுகிறார்".

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x