Last Updated : 26 Mar, 2019 06:30 AM

 

Published : 26 Mar 2019 06:30 AM
Last Updated : 26 Mar 2019 06:30 AM

வலிமையான வேட்பாளர் கிடைக்காததால் பெங்களூரு வடக்கு மக்களவை தொகுதியை காங்கிரஸுக்கு திருப்பிக் கொடுத்த தேவகவுடா

மக்களவைத் தேர்தலில் பெங்களூரு வடக்கு தொகுதியில் போட்டியிட சரியான வேட்பாளர் கிடைக்காததால், அந்த தொகுதியை முன்னாள் பிரதமர் தேவ கவுடா காங்கிரஸுக்கு திருப்பி கொடுத்துள்ளார்.

கர்நாடகாவில் 28 மக்களவை தொகுதிகள் உள்ளன. அங்கு காங்கிரஸும் தேவ கவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளமும் (மஜத) கூட்டணி அமைத்துள்ளன. எனினும், மஜத கேட்ட தொகுதிகளை ஒதுக்க காங்கிரஸ் மறுத்தது. நீண்ட இழுபறிக்குப் பிறகு மஜதவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து பெங்களூரு வடக்கு தொகுதியில் களமிறங்க தேவ கவுடா திட்டமிட்டார். ஆனால் களம் தனக்கு சாதகமாக இல்லாததால் துமக்கூருவில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

நீண்ட போராட்டத்துக்கு பிறகு உடுப்பி, ஷிமோகா உள்ளிட்ட தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேடிக் கண்டுபிடித்தார். அதேநேரம் பெங்களூரு வடக்கு தொகுதிக்கு சரியான வேட்பாளர் கிடைக்காததால் காங்கிரஸிடம் இருந்து வேட்பாளரை கடன் வாங்கும் முயற்சியில் தேவ கவுடா இறங்கினார். இது தொடர்பாக முன்னாள் முதல்வர் சித்தராமையா, அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். தேவ கவுடாவின் ஆலோசனையை ஏற்க மறுத்த சித்தராமையா, அந்த தொகுதியை காங்கிரஸுக்கு திருப்பி தருமாறு கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் பெங்களூரு வடக்கு தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிடும் அளவுக்கு வலிமையான வேட்பாளர் கிடைக்காததால் அந்த தொகுதியை காங்கிரஸுக்கு திருப்பி தருவதாக நேற்று அறிவித்தார்.

வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் உடனடியாக அதேநேரம் வலிமையான வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டிய நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது. இந்த குழப்பம் காரணமாக, காங்கிரஸ்-மஜத கூட்டணி சார்பில் அந்தத் தொகுதியில் இன்னும் தேர்தல் பணிகளும் தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x