Last Updated : 09 Mar, 2019 09:06 AM

 

Published : 09 Mar 2019 09:06 AM
Last Updated : 09 Mar 2019 09:06 AM

நாட்டின் செல்வங்களை கொள்ளையடிக்கிறது மோடி அரசு- மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை மம்தா பானர்ஜி தொடங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:

பாஜக ஆட்சியின் கீழ், நாட்டு மக்கள் பலவிதமான துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். பிரதமர் மோடி எடுத்து தவறான முடிவுகளால் பல லட்சக்கணக்கான குடும்பங்கள் மீளாத் துயரத்தில் ஆழந்துள்ளன.

குறிப்பாக, பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் நாட்டில் உள்ள சிறு குறுதொழில்கள் நசிந்துள்ளன. அவற்றால், அதிலிருந்து இன்றுவரை மீள முடியவில்லை. பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் தீவிரவாதம் ஒழியும் என மோடி தெரிவித்தார். ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் காஷ்மீரில் தீவிரவாதம் 260 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஊழலில் திளைத்து வரும் பாஜக அரசு, நாட்டின் செல்வங்களையும், வளங்களையும் கொள்ளையடித்து வருகிறது. ரஃபேல் ஒப்பந்தத்தில் கோடிக்கணக்கிலான பணம் திருடப்பட்டுள்ளது. அந்தப் பணம் யாவும் பாஜகவுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெறவில்லை எனக் கூறி வந்த மத்திய அரசு, தற்போது அதுதொடர்பான ஆவணங்களைக் காணவில்லை எனத் தெரிவித்திருக்கிறது. இதிலிருந்தே அந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பது தெளிவாகிறது. ஒப்பந்த ஆவணங்களை கூட பாதுகாக்க முடியாத மோடி அரசு, எப்படி இந்த நாட்டை பாதுகாக்க போகிறது என மக்கள் கேள்வியெழுப்புகின்றனர். இதற்கு மோடி பதிலளிப்பாரா?

மோடி அரசின் இத்தகைய முறைகேடுகளின் காரணமாகவே, ரிசர்வ் வங்கி ஆளுநர்கள், சிபிஐ அமைப்பின் இயக்குநர்கள் ஆகியோர் தொடர்ந்து பதவி விலகி வருகின்றனர். இவ்வாறு, நாட்டில் உள்ள அனைத்து அமைப்புகளையும் மோடி அரசு செயலிழக்கச் செய்துவிட்டது.

நாட்டு மக்கள் குறித்து சிறிதும் கவலை இல்லாமல், தொடர்ந்து ஊழலையும், அராஜகத்தையும் நிகழ்த்தி வரும் மோடி அரசுக்கு வரும் மக்களவைத் தேர்தலில் மக்கள் கட்டாயம் பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x