Published : 26 Feb 2019 09:18 AM
Last Updated : 26 Feb 2019 09:18 AM

வருவேன்.. மக்களுக்கு சேவை செய்வேன்.. உறுதிப்படுத்தினார் சோனியா மருமகன் வதேரா

சோனியா குடும்பத்தில் ராகுல் காந்தி கட்சித் தலைவர் பதவியேற்றுவிட்டார். பிரதமர் வேட்பாளராகவும் அவர் அறியப்படுகிறார். அவரது சகோதரி பிரியங்காவும் களத்தில் இறங்கிவிட்டார். தற்போதைக்கு இருப்பது சோனியாவின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா. அவர் வருவாரா...

அதை உறுதிப்படுத்தும் வகையில் 2 நாட்களுக்கு முன்னர் முகநூலில் வதேரா ஒரு பதிவிட்டார். அதில், ‘‘முதலில் என் மீதான பொய் புகார்களில் இருந்து நான் வெளியில் வரவேண்டும். அதன்பிறகு இந்த நாட்டு மக்களுக்காக சேவை செய்ய வருவேன்’’ என்று கூறியிருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்தவர் ராபர்ட் வதேரா. அந்த நகரத்தின் பல இடங்களில் உடனடியாக இந்தியில் சுவரொட்டி ஒட்டப்பட்டுவிட்டது. ‘‘வதேரா ஜி.. உங்களை வரவேற்கிறோம். வாருங்கள்... மொராதாபாத் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுங்கள்’’ என்று சுவரொட்டிகள் முளைத்துவிட்டன.

இதுகுறித்து வதேராவிடம் செய்தியாளர்கள் நேற்று கேட்டபோது, ‘‘முதலில் என் மீதான பொய் வழக்குகள் முடிவுக்கு வரவேண்டும். அதன்பிறகு இந்த நாட்டு மக்களுக்கு சேவையாற்ற வருவேன். இப்போதைக்கு அவசரம் ஒன்றும் இல்லை’’ என்றார்.

ஆனால், வதேராவை வரவேற்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சந்தீப் தீக் ஷித் அதிருப்தி அடைந்துள்ளார். அவர் கூறும்போது, ‘‘இது காங்கிரஸ் தொண்டர்களைப் பொறுத்தது. ஒவ்வொருவரும் தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றனர். அதற்கு எல்லோருக்கும் சுதந்திரம் உள்ளது’’ என்று தெரிவித்தார்.

பி - ஆர் சர்க்கஸின் ஜோக்கர்’

ராபர்ட் வதேரா அரசியலுக்கு வருவது குறித்து கருத்து தெரிவித்த பிறகு பாஜக விமர்சித்துள்ளது. ‘‘ராபர்ட் வதேரா சர்க்கஸ் ஜோக்கர்’’ என்று பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘பி - ஆர் (பிரியங்கா - ராகுல்) சர்க்கஸ், ஒரு ஜோக்கருக்காகக் காத்திருந்தது. இப்போது அந்த ஜோக்கரைப் பார்க்க முடிகிறது’’ என்று ராபர்ட் வதேராவை குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x