Published : 04 May 2014 04:41 PM
Last Updated : 04 May 2014 04:41 PM

தேர்தல் விதிமீறல் வழக்கு: முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் கைதாகி ஜாமினில் விடுதலை

தேர்தல் விதிமீறல் வழக்கு தொடர்பாக முன்னாள் திமுக அமைச்சர் சுப. தங்கவேலனை காவல்துறையினர் ஞாயிற்றுக் கிழமை கைது செய்தனர்.

மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் கடந்த ஏப். 24-ம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரப் பெட்டிகள் ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. தேர்தலில் பதிவான வாக்குகளும் வரும் மே 16-ம் தேதி எண்ணப்பட உள்ளன.

இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தல் சம்பந்தமான விதிமீறல் வழக்கையும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மக்களவை திமுக வேட்பாளராக முகமதுஜலீல் போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக திமுக மாவட்டச் செயலரும் முன்னாள் அமைச்சருமான சுப.தங்கவேலன் உள்ளிட்டோர் கடந்த ஏப். 20-ம் தேதி அபிராமம் அருகே கொடுமலூர் கிராமத்தில் 16 வாகனங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்தனர்.

16 வாகனங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்ததாக அபிராமம் காவல் நிலையத்தில் தேர்தல் அதிகாரியான கூட்டுறவு சார்-பதிவாளர் தனபாலன் கொடுத்த புகாரின் பேரில்

சுப. தங்கவேலன் மீது காவல்துறையினர் தேர்தல் விதிமீறல் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அபிராமத்தில் திமுக பிரமுகர் வீட்டு விழாவில் கலந்துகொள்ள வந்த சுப. தங்கவேலனை அபிராமம் காவல் நிலையப் போலீஸார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் சுப.தங்கவேலன் விடுதலை செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x