Published : 28 Apr 2014 06:30 PM
Last Updated : 28 Apr 2014 06:30 PM

ராகுல் காந்தி ஒரு காமெடியன்: ஜான்சி தேர்தல் பிரச்சாரத்தில் நரேந்திர மோடி விமர்சனம்

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஒரு காமெடியன் என்று நரேந்திர மோடி விமர்சனம் செய்துள்ளார்.

உத்தரப் பிரதேசம் ஜான்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக மூத்த தலைவர் உமா பாரதியை ஆதரித்து கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் குஜராத், பஞ்சாப் மாநிலங்களிலும் அவர் பிரச்சாரம் செய்தார். அந்த பொதுக்கூட்டங்களில் அவர் பேசியதாவது:

சுனாமி வந்து கொண்டிருக் கிறது என்பது காங்கிரஸுக்கு தெரிகிறது. ஆனால் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தெரிய வில்லை. அவரது கண்களுக்கு தாய், மகன் (சோனியா-ராகுல்) மட்டுமே தெரிகிறார்கள். பணவீக்கம், ஊழல் விவகாரங்கள் என இந்தியாவின் முக்கியப் பிரச்சினைகள் எதுவுமே அவரது கண்களுக்குத் தெரிவதில்லை.

இந்தி டி.வி. ரசிகர்களிடம் மிகவும் பிரபலமான கபில் சர்மாவின் நிகழ்ச்சி விரைவில் நிறைவு பெற்றுவிடும் என்று கருதுகிறேன். ராகுல் காந்தியின் பேச்சுகள் அடங்கிய வீடியோக்களை ஒளிபரப்பினால் கபில் சர்மா காணாமல் போய்விடுவார்.

இப்போதைய தேர்தல் பிரச்சார சூடு எல்லாம் பறந்துபோய்விடும். பொழுதுபோக்குக்காக நீங்கள் வேறு எங்கும் செல்ல வேண்டாம். ராகுல் வீடியோக்களை பாருங்கள். நாள் முழுவதும் சிரித்துக் கொண்டே இருக்கலாம்.

சில நேரங்களில் நீங்கள் மனஇறுக்கத்தில் இருந்தால் உடனடியாக ராகுலின் பேச்சு களை கேளுங்கள். அவரது கணித அறிவின்படி குஜராத்தில் 27,000 கோடி பணியிடங்கள் காலியாக உள்ளன. மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையே 6 கோடிதான். இந்தியாவின் மொத்த மக்கள்தொகை 125 கோடி. அதையும் தாண்டி குஜராத்தில் 27,000 கோடி பணியிடங்கள் காலியாக இருப்பதாக ராகுல் கூறுகிறார்.

எந்த மாதிரியான நபரை தேர்தல் பிரச்சாரத்துக்கு காங்கிரஸ் அனுப்பி வைத்துள்ளது என்பது எனக்குப் புரியவில்லை.

இதேபோல் குஜராத்தில் லோக்ஆயுக்தா இருந்திருந்தால் நான் சிறைக்குச் சென்றிருப்பேன் என்று ராகுல் கூறியிருக்கிறார். குஜராத் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் ஒருவரை குற்றவாளி யாக அறிவித்தது மாநில லோக்ஆயுக்தாதான் என்பதை ராகுலுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். அவரது மகன்கூட தற்போது மத்திய அரசில் அமைச்சராக உள்ளார். இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதே ராகுலுக்கு தெரியவில்லை.

குஜராத்தில் நர்மதா நதி அணைத் திட்டத்தைச் செயல்படுத்தினால் அடுத்த 50 ஆண்டுகளுக்கு மாநிலத்தில் பாஜக ஆட்சியை அசைக்க முடியாது. அதனால் அந்தத் திட்டத்துக்கு அனுமதி கொடுக்க வேண்டாம் என்று சோனியாவுக்கு ஒருவர் (அகமது படேல்) ஆலோசனை கூறியுள்ளார். அதனால்தான் அந்தத் திட்டத் துக்கு மத்திய அரசு இன்றுவரை அனுமதி வழங்காமல் இழுத்தடிக் கிறது. நான் டீ விற்றேனா, இல்லையா என்பது குறித்து விசாரிக்க சுமார் 100 பேரை எனது சொந்த ஊரான வட்நகருக்கு காங்கிரஸ் அனுப்பி வைத்துள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x