Published : 10 Apr 2014 08:40 PM
Last Updated : 10 Apr 2014 08:40 PM

பாலியல் பலாத்காரத்துக்கு மரண தண்டனையா?- முலாயம் சிங் பேச்சால் சர்ச்சை

பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைத் தூக்கிலிடக் கூடாது. சிறுவர்கள் தவறு செய்வது இயல்பு என சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் பிரச்சாரத்தில் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

மொராதாபாத்தில் முலாயம்சிங் யாதவ் தேர்தல் பிரச்சாரத்தில் வியாழக் கிழமை ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:

மும்பை சக்தி மில்லில் கூட்டு பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபட்ட மூவருக்கு தூக்குதண்டனை விதிக்கப் பட்டுள்ளது. பாலியல் பலாத்காரத்துக்கு மரண தண்டனை விதிக்க வேண்டுமா?

சிறுவர்கள் எப்போதும் சிறுவர்களே. அவர்கள் தவறு செய்வது இயல்பு. அவர்களுக்கு மரண தண்டனை வழங்கக் கூடாது. இளைஞனும், இளம்பெண்ணும் காதல் வயப்படுகின்றனர். சில கருத்து வேறுபாடுகளால் பிரிந்து விடுகின்றனர். நட்பு முறிந்தவுடன், அந்தப் பெண் தான் பலாத்காரம் செய்யப்பட்டதாகப் புகார் கூறுகிறார்.

பாலியல் பலாத்காரத்துக்கு எதிரான சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும். அதற்குத் தேவையான முயற்சிகள் எடுக்கப்படும். இச்சட்டங் களைத் தவறாகப் பயன்படுத்து வர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றார்.

முலாயம்சிங்கின் இந்த சர்ச்சைப் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். “முலாயம் சிங்கை நாங்கள் கண்டிக்கிறோம். பெண்களுக்கு எதிரான பலாத்காரம் மற்றும் குற்றங்களை இம்மியளவு கூட பொறுத்துக் கொள்ள முடியாது” என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.கிரண் பேடி கூறுகையில், “முலாயம் சிங்கின் இந்தப் பேச்சு பெண்களுக்கு எதிரானது மட்டுமல்ல; சமூகத்துக்கு எதிரானது. அவர்களுக்கு ஒரு வாக்குகூட கிடைக் காமல் தண்டிக்க வேண்டும்” என்றார்.

மும்பை சக்தி மில்லில் ஒரு பெண் செய்தியாளர் உள்பட 2 பேர் அடுத்தடுத்து ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். ஒரே கும்பல் இச்செயலில் ஈடுபட்டதால், அவர்கள் திருந்துவதற்கு வாய்ப்பில்லை எனக் கூறிய மும்பை நீதிமன்றம் அவர்களுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இதனை பெரும்பாலானவர்கள் வரவேற்றனர். இந்நிலையில்தான் முலாயம்சிங் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட அம்மூவரும் சிறுவர்களின் இயல்பான குணத்தினால் தவறிழைத்துவிட்டனர். ஆகவே, அதற்கு மரணதண்டனை விதிக்கக் கூடாது என்ற ரீதியில் பேசியுள்ளார்.

டெல்லியில் மருத்துவ மாணவி கூட்டு பாலியல் பலாத்காரத்தால் உயிரிழந்த சம்பவத்தையடுத்து பாலியல் பலாத்காரத்துக்கு எதிராக புதிய சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தைப் பல்வேறு கட்சிகளும் வரவேற்றன. ஆனால், நாடாளுமன்றத்தில் இச்சட்டம் மசோதாவாகக் கொண்டுவரப்படும் போது சமாஜ்வாதி கட்சி அதை எதிர்த்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x